சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது. மேயர் சைதை துரைச்சாமி இந்த பட்ஜெட்டை நேற்று உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார்.

இந்த பட்ஜெட்டில் அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை,‌ அம்மா கேன் குடிநீர், அம்மா தங்கும் விடுதி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும், சென்னை நகர சாலைகளில் இந்தியர் அல்லாதவர்களின் பெயர்கள் மாற்றப்படும் என்றும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் உருவாகி, அந்த திரைப்படங்கள் வெளியாக முடியாமல் ஆயிரக்கணக்கில் பெட்டிக்குள் முடங்கியிருப்பதால், அந்த திரைப்படங்கள் அனைத்தும் அம்மா திரையரங்கம் மூலம் ரிலீஸ் செய்யப்பட்ட சம்மந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு உரிய வருமானம் பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

சென்னையில் உள்ள சாலைகள், பூங்காக்களை சீரமைக்க, ஆயிரத்து 301 கோடி ரூபாயும், மழைநீர் சேமிப்பு வடிகாலுக்கு 450 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்த மேயர் சைதை துரைச்சாமி, வரும் ஆண்டு சென்னையில் ரூ.600 கோடி அளவுக்கு சொத்து வரி வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு தேவையான உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறி கடும் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சென்னை மாநகராட்சியில் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply