சி.பி.எஸ்.இ. சார்பில் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடந்த அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதோடு மறு தேர்வை நான்கு வாரங்களுக்குள் நடத்துமாறும் சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்இ சார்பில் கடந்த மே 3-ம் தேதி அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 5-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் ஹரியானா மாநிலத்தின் சில இடங்களில் நடந்த வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்டது. இதனால் இந்த தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று மாணவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்திருந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அமிதாபா “சட்ட விரோதமாக ஒரேயொரு மாணவர் பயனடைந்தாலும் அது தேர்வின் தரத்தை சீரழிக்கும். எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மருத்துவ நுழைவுத் தேர்வின் புனிதத்தை நாங்கள் தியாகம் செய்ய முடியாது. இதை காக்க நீங்கள் தவறிவிட்டீர்கள். தேர்வு நடைமுறைகள் மிகவும் பழமையானவை. கடந்த 2, 3 ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் சிபிஎஸ்இ உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வெளியிட்ட நீதிபதிகள், “சி.பி.எஸ்.இ. சார்பில் கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது என்றும் சிபிஎஸ்இ மறு தேர்வை 4 வாரங்களுக்குள் நடத்த வேண்டும்” என்றும் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.