shadow

மீண்டும் திமுக கூட்டணியா? குழப்பத்தின் உச்சத்தில் விஜயகாந்த்
vijayakanth
விஜயகாந்தின் தேமுதிக கட்சி குழப்பங்களின் மொத்த உருவமாக காட்சி அளிப்பதாக் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதை நிரூபிப்பது போல் இன்று காலை இரண்டாம் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பின்னர் பத்திரிகைக்கு பேட்டி அளித்த விஜயகாந்த், திமுக, அதிமுக என மாறி மாறி இரண்டு கட்சிகளும் கடந்த 60 ஆண்டுகளாக கொள்ளை அடித்துள்ளதாகவும், இதனால் தனக்கு ஒரு வாய்ப்பு தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இந்த பேட்டி வெளியான ஒருசில நிமிடங்களில் திமுக கூட்டணி குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என தேமுதிக மாவட்ட செயலாளர்களுக்கு தேமுதிகவின் தலைமை உறுதி அளித்துள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து மாவட்டச் செயலாளர்களை சந்தித்து விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனித்து போட்டி என்ற அறிவிப்பால் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், கூட்டணி இல்லை என்றால் தங்களுக்கு சீட் தேவையில்லை, தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என பலர் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இதனால் வேறு வழியின்றி இதுகுறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி,  விஜயகாந்த் விரைவில் விவாதிக்கவுள்ளதாகவும், இந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மீண்டும் திமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இனிமேல் திமுக கூட்டணியில் இணைந்தால் விஜயகாந்தின் டிமாண்ட் எடுபடாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply