தமிழகத்தில் மூன்று மேயர் பதவிகள் உள்பட காலியாக உள்ள இடங்களுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
போதுமான அவகாசம் கொடுக்காத தேர்தல் ஆணையத்தை கண்டித்து இந்த தேர்தலை புறக்கணிப்பதாக தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே, அறிவித்துள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
ஆனால் ஆளுங்கட்சியை எதிர்த்து பாரதிய ஜனதா இந்த தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் அவர் கூட்டணி கட்சிகளிடம் விறுவிறுப்பாக ஆதரவு திரட்டி வருகிறார். வைகோ ஏற்கனவே தனது ஆதரவை பாரதிய ஜனதாவுக்கு தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். நெல்லை மேயர் பதவிக்கு புவனேஸ்வரி, தூத்துக்குடி மேயர் பதவிக்கு அந்தோணி கிரேசி, கோவை மேயர் பதவிக்கு கணபதி ராஜ்குமார் ஆகியோர் உள்பட நகராட்சி தலைவர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் நேற்றே வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பது குறிப்பிடத்தக்கது.,
Leave a Reply
You must be logged in to post a comment.