சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 2467 ஆட்டோக்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 71,470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் ஆட்டோ மீட்டர்களில் புதிய கட்டணத்தை திருத்தி அமைக்க அரசு உத்தரவிட்டது. ஆனாலும், முழுமையாக ஆட்டோக்களுக்கு மீட்டர்கள் திருத்தியமைக்கப்படவில்லை. 62,429 ஆட்டோக்களுக்கு புதிய ஆட்டோ கட்டண பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 29,289 ஆட்டோக்களில் மீட்டர் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மீதமுள்ள ஆட்டோக்களின் மீட்டர்களை திருத்தியமைக்க நவம்பர் 15 ஆம் தேதி வரை அரசு அவகாசம் அளித்துள்ளது. எனினும் போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆட்டோகளுக்கு மீட்டர் திருத்தியமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 2467 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் புகார் வந்தவுடன் வேன்களில் சென்று தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply