shadow

அத்தையின் சொத்து வேணும், பதவி வேணும், தண்டனை மட்டும் வேண்டாமா? தீபக், தீபாவிற்கு நடிகர் ஜீவா கேள்வி

ஜெயலலிதா இருக்கும் வரை யார் என்று தெரியாத தீபா, திடீரென ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அரசியல் நுழைய முயற்சித்தார். இன்று அவர் புதிய கட்சியும் ஆரம்பிக்க உள்ளார். முன்பெல்லாம் அரசியல் சேருவது என்றால் முதலில் அடிமட்ட தொண்டனாகி பின்னர் சின்னச்சின்ன பதவிகள் பெற்று, அதன் பின்னர் மாவட்ட செயலாளர், எம்.எல்.எ அதன்பின்னர் அமைச்சர் மற்றும் முதலமைச்சர் என படிப்படியாக உயர்வது உண்டு. ஆனால் தற்போது அரசியலில் நுழைந்த அடுத்த நாளே பொதுசெயலாளர், அதற்கும் அடுத்த நாள் முதலமைச்சர் என்ற கனவுடன் ஒருசிலர் அரசியலுக்கு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கட்சி ஆரம்பித்துள்ள தீபாவிற்கும் அவருடைய சகோதரர் தீபக் அவர்களுக்கும் நடிகர் ஜீவா தனது ஃபேஸ்புக்கில் தாழ்மையான வேண்டுகோளை வைத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஜெ தீபா, உங்களுக்கு அத்தையின் (ஜெயலலிதா) சொத்துக்கள் வேண்டும், அத்தையின் கட்சி வேண்டும், அத்தையின் பதவிவேண்டும்.. அத்தைக்கு கிடைத்த தண்டனை மட்டும் உங்களுக்கு வேண்டாமா. அத்தையின் வாரிசுதானே..? உங்கள் அத்தையை ஊழல் செய்த குற்றவாளியென உச்சநீதிமன்றம் உறுதிசெய்த அதே நாளில், அதை ஒரு பெருமையாக நினைத்துக் கொண்டு உங்களால் எப்படி அரசியல் பிர(வேஷம் ) செய்ய முடிகிறது.

உங்களுக்கு அரசியல் ஆசை இருந்தால் அந்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை அவருக்கு பதிலாக நீங்கள் அனுபவித்து உங்கள் தலைவி மீதுள்ள களங்கத்தை போக்கிவிட்டு அரசியலுக்கு வாருங்கள்… மக்களை ஏமாற்றாதீர்கள். தீபாவுக்கு, என் தாழ்மையான வேண்டுகோள்… தமிழக மக்கள் ஐம்பது ஆண்டுகளாக ஏமாந்தது போதும். உங்கள் சுயநலத்திற்காக கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை நீங்களும் ஏமாற்றாதீர்கள் !

தமிழகத்தின் தற்போதய தேவை சுயநல, அனுதாப ஆட்சி இல்லை. அறவழியிலான ஆக்கபூர்வ ஆட்சி,”

இவ்வாறு நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

Leave a Reply