புதுடெல்லி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றிய தகவல் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பூமிக்கு மேல் இயற்கையாகவே ஓசோன் படலம் அமைந்துள்ளது. சூரியனில் இருந்து வரும் உடலுக்கு தீங்கான புற ஊதாக்கதிர்கள், பூமியைத் தாக்காதவாறு அந்த படலம்தான் பாதுகாக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய படலமானது காற்றில் கலந்து வரும் நச்சு வாயுக்களால் சமீபகாலமாக சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ‘ஓசோன் படலம் சேதமடைவது, சர்வதேச பிரச்னை’ என்று கூறியிருந்தது.
அந்த மனு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நீதிபதி சுதந்தர் குமார் தலைமையிலான பசுமை தீர்ப்பாய பெஞ்ச் கடுமையாக சாடியது. மேலும், ”ஓசோன் படலம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் இந்தியாவுக்கு எப்போதிருந்து தெரியும் என்று உங்களுக்கு தெரியுமா? அதை முதல்முதலில் அறிந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இதற்கான ஆதாரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 700 ஆண்டுகளுக்கு முந்தைய பூகோள சக்கரத்தில் உள்ளது. அந்த சக்கரத்தில், ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதை பாதுகாப்பதற்கான வழிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓசோன் படலம் பற்றி 700 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அறிந்திருந்தது என்பதை தெரிந்துகொள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பூகோள சக்கரத்தை பாருங்கள்” என்று கூறியது.
இதன்மூலம், அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே நம் முன்னோர்கள் ஓசோன் பற்றி அறிந்து வைத்திருந்தார்கள் என்பது நமக்கு பெருமை அளிக்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.