7 பேர் விடுதலை: தமிழக அமைச்சரவை தீர்மானம் என்ன?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில் இவர்களை விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது.
இதனையடுத்து, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்யு வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்
இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்படும்.
அதன்பின்னர், ஆளுநர் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கமுடியும் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவு குறித்து பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.