ஜிப்மர் தேர்வு எழுதி வெற்றி பெற்ற 44 வயது தலைமை ஆசிரியர். மருத்துவ படிப்பு படிப்பாரா?
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரிக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 5ஆம் தேதி நடைபெற்றது. 200 இடங்களுக்கான இந்த தேர்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் 44 வயது சரவணன் என்பவர் எழுதி வெற்றியும் பெற்றுள்ளார்.
44 வயது உடையவர் எப்படி ஜிப்மர் நுழைவுத்தேர்வு எழுத முடியும்? இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்து வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதில் கூறும் வகையில் தலைமை ஆசிரியர் சரவணன் கூறியதாவது: மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஜிப்மர் நுழைவுத் தேர்வை 55 வயது வரை யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று விதிமுறையில் இருக்கின்றது. அதன் அடிப்படையில்தான் நான் நுழைவுத் தேர்வை எழுதினேன்.
மேலும், எங்கள் பள்ளியில் கடந்த ஆண்டுதான் +1 வகுப்பு தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த வருடம் +2 தேர்வு எழுத இருக்கும் அந்த மாணவர்களுக்கு ஜிப்மர் நுழைவுத் தேர்வு எழுதுவது குறித்தும் நாங்கள் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறோம். எனது அனுபவத்தை வைத்து மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க முடியும் என்பதால் மட்டுமே நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டேன். ஆனால், தற்போது நான் அதில் வெற்றி பெற்றிருப்பது உண்மையில் மகிழ்ச்சி. மேலும், பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தால் ‘மாணவனாக’ ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல தயாராகவே இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
ஒருவேளை சரவணன் கல்லூரியில் சேரவில்லை என்றால் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் மாணவருக்கு அந்த இடம் சென்றுவிடும். தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக ஒரு தலைமை ஆசிரியரே நுழைவுத்தேர்வு எழுதியவதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.