சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து. 40 பேர் படுகாயம்
சென்னை-மங்களூர் விரைவு ரயில் இன்று அதிகாலை விருத்தாச்சலம் அருகே திடீரென தடம் புரண்டு ஏற்பட்ட விபத்து காரணமாக 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும், காயம் அடைந்த அனைவரும் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சென்னையில் இருந்து நேற்று மங்களூர் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணிக்கு விருத்தாச்சலம் அருகேயுள்ள பூவனூர் என்ற இடத்தில் திடீரென தடம் புரண்டது. ஒரே நேரத்தில் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் 19 பெண்கள் மற்றும் 1 சிறுமி உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் தெரிந்து உடனே விபத்து நடந்த இடத்திற்கு சென்ற மீட்புக்குழுவினர் காயம் அடைந்த அனைவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இடுபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்தவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை வரும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகியவை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் நிற்குமிடம் மற்றும் விபத்தில் காயம் அடைந்தவர்கள் குறித்த விபரங்கள் தெரிந்து கொள்ள 044-29015203 என்ற எண்ணுக்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.