45 நாட்கள் மீன்பிடிக்க இருந்த தடை விலகிய முதல் நாளே 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். காங்கிரஸ் அரசு இருந்தவரை தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பது தொடர்கதையாக இருந்த நிலையில் மோடியின் பதவியேற்புக்கு பின்னர் இலங்கை கடற்படையினர்களின் அட்டகாசம் அடங்கும் என தமிழக மக்கள் நம்பிக்கை கொண்ட இந்த நேரத்தில் மீண்டும் இலங்கை கடற்படையினர் அட்டகாசம் செய்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கடல் பகுதிகளில் மீன்வளம் பெருக்குவதற்காக 45 நாட்கள் மீன்பிடிக்க அரசு தடை விதித்திருந்தது. இந்த தடை மே 31ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் நேற்று இரவு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், சோலியாக்குடி ஆகிய பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் அனைவரும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை படையினர் அனைவரையும் கைது செய்ததோடு அவர்களுடைய விசைப்படகுகளையும் கைப்பற்றினர்.
கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்து உடனடியான நடவடிக்கையை தமிழக அரசும், மோடி தலைமையிலான மத்திய அரசும் எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.