shadow

செப்டம்பர் 1 முதல் வங்கிகளுக்கு 2வது மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை

bankவங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வங்கிகளுக்கு இனி 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தற்போது, பொதுத் துறை, தனியார் துறை வங்கிகள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அரை நாள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் வங்கி ஊழியர்களின் வேலைப்பளு மற்றும் ஓய்வை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து வரும் செப்டம்பர்  மாதம் 1 ஆம் தேதி முதல், அனைத்து வங்கிகளுக்கும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க (ஏ.ஐ.பி.ஈ.ஏ.) பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய நடைமுறை தொடர்பான அறிவிக்கை, விரைவில் வெளியாகும். இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதனால், வங்கி ஊழியர்களுக்கு பணிச்சுமை பெருமளவில் குறைவதுடன், அவர்களின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

ஆனால் இந்த புதிய முறைக்கு வங்கி வாடிக்கையாளர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வர்த்தகம் செய்பவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே திருவிழா உள்பட முக்கிய தினங்கள் என அதிக விடுமுறை வங்கி ஊழியர்களுக்கு இருப்பதால் இந்த விடுமுறை தேவையற்றது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply