shadow

ரக்பி விளையாட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட 22  இந்திய சிறுவர்கள் பிரான்ஸில் மாயம்:

பிரான்ஸ் நாட்டிற்கு ரக்பி விளையாட்டு பயிற்சிக்காக அழைத்து செல்லப்பட்ட 22 இந்திய சிறுவர்கள் திடீரென மாயமாகியுள்ளது குறித்து சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது குறித்து சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த 25 பள்ளி மாணவர்கள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடக்கும் ரக்பி விளையாட்டு பயிற்சிக்கு அழைத்து செல்ல டெல்லியை சேர்ந்த டிராவல் ஏஜென்ட்கள் அணுகினர். இதற்காக ஒவ்வொரு மாணவரின் பெற்றோர்களும் ஏஜண்டுகளுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து 25 மாணவர்களும் பாரீஸ் அழைத்து செல்லப்பட்டனர்.

பாரீஸ் நகரில் ஒரு வாரம் பயிற்சி முகாமில் 25 மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஏஜென்ட்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த 3 பேர் அங்கிருந்து தப்பி இந்தியா திரும்பினர். இதனையடுத்து 22 மாணவர்களின் நாடு திரும்புவதற்கான டிக்கெட்டை ஏஜென்ட்கள் ரத்து செய்தனர். இதனால் செய்வதறியாது தவித்த மாணவர்கள் அங்கள்ள குருத்வாராவில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்களை திடீரென காணவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் போலீசார் ஒருவரை கைது செய்து விசாரனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த தகவல் சிபிஐக்கு தெரியவந்ததும் உடனடியாக சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான பெற்றோர்களை தொடர்பு கொண்டு சிபிஐ விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் காணாமல் போன சிறுவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply