shadow

2016-ல் ரியல் எஸ்டேட் பிசினஸ் எப்படி இருந்தது?

 இந்திய உள்நாட்டு உற்பத்திக்குப் பிரதானமாகப் பங்களிக்கும் துறை ரியல் எஸ்டேட் துறை. வணிக வளாகக் கட்டிடங்கள், குடியிருப்புத் திட்டங்கள் எனப் பலவகைப்பட்ட கட்டுமானத் திட்டங்கள் வழியே ரியல் எஸ்டேட் துறையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வகைசெய்கிறது. இத்துடன் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியானது அதைச் சார்ந்து இயங்கும் இருபதுக்கும் மேற்பட்ட துறைகளுக்கும் பயனளிக்கிறது என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள். ஆகவே, ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசின் கொள்கை முடிவுகள் சார்ந்த சட்டங்கள் நேரிடையாக ரியல் எஸ்டேட் துறையுடன் தொடர்புகொண்டிருக்கின்றன.

2016-ம் ஆண்டின் இறுதி நாட்களைக் கடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் ரியல் எஸ்டேட் துறையின் இந்த ஆண்டுப் பயணத்தைச் சற்றே அசைபோட்டுப் பார்க்கும்போது, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல அம்சங்களை நினைவுபடுத்த வேண்டியதுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நவம்பர் 8 அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பண மதிப்பு நீக்கமும் ரியல் எஸ்டேட் துறையைப் பாதித்த விஷயங்களில் பிரதானமானது. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த ஆண்டில் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பல கொள்கை முடிவுகளை இத்துறை எதிர்கொண்டிருக்கிறது.

இந்தக் கொள்கை முடிவுகளால் ரியல் எஸ்டேட் துறைக்கு அனுகூலமான சூழல் ஏற்பட்டுள்ளதா, இல்லையா என்ற கேள்வி எழுவது இயல்பு. ரியல் எஸ்டேட் துறையில் இந்திய அளவில் இயங்கிவரும் பல நிபுணர்கள் இது தொடர்பான தமது கருத்துகளை ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கொள்கை முடிவுகளின் காரணமாக ரியல் எஸ்டேட் துறைக்குத் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் அனுகூலமே விளையும் என்கிறார்கள் இந்த நிபுணர்கள்.

எந்தத் துறை என்றாலும் அந்தத் துறைக்கு அரசிடமிருந்து கிடைக்கும் நேரடியான, மறைமுகமான ஆதரவைப் பொறுத்தே அந்தத் துறையின் வளர்ச்சியானது அமையும். ரியல் எஸ்டேட் துறைக்கு இந்த ஆண்டில் கிடைத்த வீட்டுக் கடன் சலுகை உள்ளிட்ட அம்சங்கள் இத்துறைக்கு ஊக்கமே தந்துள்ளன. இதனால் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் ரியல் எஸ்டேட் துறை ஏறுமுகத்தில் செல்ல இவை உதவின. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டமும் ரியல் எஸ்டேட் துறையில் நிலவிய பல சிக்கல்களைக் களைந்து அத்துறை சீராக முன்னேற உதவவே செய்கிறது. அதே போல் மத்திய அரசு 2022-க்குள் எல்லோருக்கும் வீடு என்னும் திட்டத்தை வலுவுடன் செயல்படுத்திவருவதும் ரியல் எஸ்டேட் துறைக்கான உந்து சக்தியாகவே இத்துறையினரால் பார்க்கப்படுகிறது.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் போன்ற சட்டங்கள் இத்துறையில் காணப்படும் சீர்கேடுகளைக் களைய உதவுகின்றன. ரியல் எஸ்டேட் துறைக்கு வரும் முதலீடுகளை முறையாகப் பேணவும், கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கின்றன.

வாடிக்கையாளர்களின் நலனை முன்னிருத்திப் பல ஆக்கபூர்வமான செயல்பாடுகள் நடந்தேறிவருவதால் அவை ரியல் எஸ்டேட் துறையை ஏற்றம்காணச் செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மத்திய அரசிடமிருந்து இத்துறை இத்தனை அனுகூலங்களைப் பெற்றிருந்தபோதும் ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்கம் இத்துறையைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது என்பதையும் இத்துறையினர் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.

ஆண்டின் கடைசி இரு மாதங்களில் பெருமளவில் நடைபெற்றிருக்க வேண்டிய விற்பனைகளை இந்தப் பண மதிப்பு நீக்க அறிவிப்பு ஈவுஇரக்கமின்றி காலிசெய்திருக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் ரியல் எஸ்டேட் துறையை வளர்க்கும் வகையில் மத்திய அரசிடமிருந்து கிடைத்த ஆதரவால் ரியல் எஸ்டேட் துறையினருக்கு ஏற்பட்டிருந்த மகிழ்ச்சியை இந்த ஒற்றை அறிவிப்பு ஒன்றுமில்லாமல் ஆக்கியிருக்கிறது. ஆனாலும் இந்த நிலைமை தற்காலிகமானது என்றும் இந்தத் தற்காலிகச் சுணக்கம் புத்தாண்டில் மறைந்து ஆக்கபூர்வமான வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை தனது காலடியைப் பதிக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply