shadow

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக சென்னை ஐகோர்ட் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், தினகரன் ஆதரவாளர்களான எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் உள்ளிட்ட 18 பேர், கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக கவர்னரிடம் கடிதம் அளித்தனர்.

இதனையடுத்து, கட்சித் தாவல் சட்டத்தின்படி 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் சபாநாயகரின் தகுதிநீக்க உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் இருவேறு மாறுபட்ட தீர்ப்பளித்திருந்தனர். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன், அவர்களிடம் சென்றது. அவர் இந்த வழக்கின் விசாரணையை முடித்து தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி சத்யநாராயணன் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவார் என நேற்று நள்ளிரவு வெளியான உயர்நீதிமன்ற அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply