18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழக கவர்னரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு 18 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் 18 பேர்களும் சபாநாயகர் முன் ஆஜராகாததால் அனைவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 2ஆம் தேதி தொடரும் என்று ஏற்கனவே அறிவித்ததன்படி இன்று இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையின்படி தலைமை நீதிபதி உள்பட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மீண்டும் முதலில் இருந்து விசாரணை தொடங்கும். எனவே இப்போதைக்கு இந்த வழக்கு முடிய வாய்ப்பில்லை என்றும், அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.