shadow

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: தீர்ப்பு எப்போது?

தமிழக அரசியலை தடம்புரட்டும் என்று எதிர்பார்க்கப்படும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மிகவிரைவில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.

இதையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார்.

அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், இன்று சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை நிறைவு செய்தார். இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி.

இந்த வழக்கில் இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வெளியாகும்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி வீட்டிற்கு செல்லும் என டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வருகிறார். எனவே, இது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply