ராமநாதபுரம் மாவட்டத்தில் 143 அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா கோலாகலமாக நடந்தது. ராமநாதபுரம், தேவிபட்டினம், பரமக்குடி, எமனேஸ்வரம், நயினார்கோவில், சத்திரக்குடி, பார்த்திபனூர், கமுதி, பெருநாழி, அபிராமம், ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், வாலாந்தரவை, உச்சிப்புளி, திருப்புல்லாணி, ஏர்வாடி, சாயல்குடி, உத்திரகோசமங்கை, சிக்கல், திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, முதுகுளத்தூர், பேரையூர், தேரிருவேலி, கீழக்கரை, இளஞ்செம்பூர், கீழச்செல்வனூர், மண்டபம் ஓடைத்தோப்பு உள்பட 33 இடங்களில் உள்ள 143 அம்மன் கோயில்களில் செப். 22ல் காப்பு கட்டுதலுடன் முளைப்பாரி விழா துவங்கியது. தினமும் இரவு இளைஞர்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் நடந்தது. செப்., 29 இரவு அம்மன் கரகம் குளம், கண்மாய், கடற்கரையில் இருந்து எடுத்து ஊர்வலமாக கோயிலை அடைந்தது. நேற்று( செப்., 30) காலை 7 மணிக்கு பக்தர்கள் பால்குடம், காவடி, அக்னி சட்டி எடுத்து ஊர்வலம் சென்றனர். இதை தொடர்ந்து அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்காக ஊர்வலம் சென்றது. பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலையில் அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்த பெண்கள், சப்பரத்துடன் ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், விழாக்குழுவினர் செய்தனர். இக்கோயில்களில் அக்.,6ல் குளுமைப் பொங்கல் விழா நடக்க உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.