142 அடிக்கும் கீழ் குறைப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை: முல்லை பெரியாறு அணை குறித்து ஓபிஎஸ்
முல்லை பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடிக்கும் கீழ் குறைப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணை உச்சநீதிமன்றம் அனுமதித்த 142 அடியை எட்டிவிட்டது. இருப்பினும் அணை பலவீனமாக இருப்பதாகவும், அணையின் நீா்மட்டத்தை 139 அடிக்கும் கீழ் குறைக்க வேண்டும் என்றும் கேரள அரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் தேனி – கொல்லம் இடையே மழை காரணமாக மலைப் பாதையில் சாலை சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் சேதமடைந்த சாலையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீா் தேக்கினாலும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று வல்லுநா் குழு அறிக்கை அளித்துள்ளது. அதனைத் தான் உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதனால் அணையின் பாதுகாப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. அணையின் நீா்மட்டத்தை 142 அடிக்கும் கீழ் குறைப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை.
அணை விவகாரத்தில் கேரளா மக்கள், தமிழக மக்கள் என்று பிரித்து பார்க்கவில்லை. கேரள மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தமிழக மக்களுக்கு ஏற்படும் பாதிப்பாக தான் நாங்கள் உணருகிறோம். கேரளா மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் நாங்கள் பார்த்து கொண்டு இருக்க மாட்டோம் என்று கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.