shadow

ஹேப்பி சைல்டு 4 கட்டளைகள்
p19a
குழந்தைகள் நல்லவராக, வல்லவராக வளர வளர்ப்பு மிகவும் முக்கியம். பெற்றோர்களின் கையில் குழந்தைகளின் எதிர்காலம் இருக்கிறது. பள்ளிப் படிப்பு என்பதையும் தாண்டி குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டியது ஏராளம்.

*பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசுவதற்கும், ஐ.க்யூ திறன் அதிகரிப்பதற்கும், வாசிப்புத் திறனுக்கும் தொடர்பு உண்டு என்கின்றன ஆய்வுகள். பிறந்த ஒரு வயதில் இருந்து  பள்ளிக்குச் செல்லும் வயது வரை குழந்தைகள் பல்வேறு வார்த்தைகளைப் பெற்றோர் மூலமாகவே கற்றுக்கொள்கிறார்கள். எனவே, வீட்டில் குழந்தைகள் முன் எப்போதுமே நல்ல வார்த்தைகளைப் பிரயோகியுங்கள்.

*குழந்தைகளை அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுகளை விளையாடவிட வேண்டும். அது, கண்ணாமூச்சியோ ஸ்கிப்பிங்கோ குழந்தைக்கு எது பிடிக்குமோ, அதை விளையாட அனுமதிக்க வேண்டும். விளையாடும்போதுதான் குழந்தைகளின் மூளை வேகமாக வேலை செய்கிறது, நினைவுத்திறன், வேலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் (Task flexibility), பிரச்னைகளைக் கையாளும் திறன் (Problem solving) போன்றவை அதிகரிக்கும்.

*டி.வி, மொபைல் பார்ப்பது குழந்தைகளுக்கு மிகவும் கெடுதலை ஏற்படுத்தும். அரை மணி நேரத்துக்கு மேல் குழந்தைகளை டி.வி பார்க்க அனுமதிக்காதீர்கள். அதிகமாக டி.வி பார்க்கும்போது  குழந்தைகளின் படைப்பாற்றல் குறைகிறது. எனவே, டி.வி, திரைப்படங்கள், வீடியோ கேம்ஸ் போன்றவற்றுக்கு அதிக நேரம் ஒதுக்கக் கூடாது என சொல்லிப் புரியவையுங்கள்.

*ஓவியம் வரைவது உள்ளிட்ட கலைகளைக் கற்றுக்கொடுங்கள். படைப்புத்திறன் நன்றாக இருந்தால், குழந்தைகள் தங்கள் வாழ்வில் மேன்மேலும் உயருவார்கள். குழந்தைகளைச் சுதந்திரமாக வளரவிடுங்கள். ஆடல், பாடல், பேச்சு, எழுத்து என எதில் அவர்கள் விருப்பம் இருக்கிறதோ, அதற்குத் தடை போடாதீர்கள். தனித்திறன் பயிற்சிகள் எல்லாம் குழந்தைகளை ஆரோக்கியமாகும். மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்.

– பு.விவேக் ஆனந்த்

குழந்தைகளுக்கு மூன்று திறன்கள் தேவை…

1.அறிவுத்திறன்

2.உணர்ச்சிகளைக் கையாளும் திறன்

3.சமூகப் பொறுப்புகளைக் கையாளும் திறன்

Leave a Reply