ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா? இன்று தீர்ப்பு
ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கவுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா? என்ற கேள்விக்கு இன்னும் சிலமணிநேரங்க்ளில் விடை கிடைத்துவிடும்
சுற்றுப்புற சூழல் பாதிப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த பல வருடங்களாக தூத்துகுடி மக்கள் போராடி வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியதாகக் கூறி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பல்வேறு நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி அளித்தது.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனமும், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடைக் கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தன. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.