வைரமுத்து எனக்கு பாலியல் தொல்லை தந்தார். சின்மயி குற்றச்சாட்டு
கோலிவுட் திரையுலகின் மிகப்பெரிய பாடலாசிரியர், ஏழு முறை தேசிய விருது பெற்றவர் என்ற பெருமைக்குரிய கவியரசர் வைரமுத்து மீது கடந்த சில நாட்களாக எழுந்து வரும் குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சிக்குரியவாறு உள்ளது. குறிப்பாக பாடகி சின்மயி தற்போது நேரடியாகவே வைரமுத்துவால் தான் பாதிக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார்.
டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சின்மயி “வைரமுத்துவால் எனக்கும் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டது. சுவிட்சர்லாந்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது நான் இதனை உணர்ந்தேன். மிகுந்த பயம் என்னை ஆட்கொண்டது. பின் வைரமுத்துவுடன் இருப்பதை நான் தவிர்த்தேன். என்னை அவரது ஹோட்டல் அறைக்கு அழைத்தார். ஆனால் நான் மறுத்து விட்டேன். அவரது அலுவலக அறையில் இரண்டு பெண்களை அவர் முத்தமிட முயற்சித்திருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய சின்மயி, “ என்னை போன்ற இன்னும் பல பெண் பாடகர்கள் இது குறித்து பேசுவார்கள் என நம்புகிறேன். வைரமுத்துவின் அதிகார பலத்தை கண்டு இதனை வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் இதுவே நேரம், அனைவரும் பேச வேண்டும்; ஏனெனில் பலரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்” என்றார்.
சி.என்.என். தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறிய சின்மயி “எந்த விளம்பரத்துக்காவும் இதனை நான் செய்ய வேண்டிய அவசியமில்லை. பாதிகப்பட்ட மற்றவர்கள் இதனை பேசுவதில் பல தடைகள் உள்ளன. எனக்கு வரும் காலங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் யாரோ ஒருவர் பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அரசியல் ரீதியாக கூட எனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படலாம்” என்றார்
Leave a Reply
You must be logged in to post a comment.