விவேக் நினைவாக மரம் நடவிருப்பதாகவும், இதுவே அவருக்கு செய்யும் சரியான அஞ்சலி என்றும் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆக்சிஜனை சுவாசிக்கக்‌ கொடுத்தவர்‌ இன்று மூச்சற்றுவிட்டார்: சிம்பு இரங்கல் செய்தி‌

சின்ன கலைவாணர் விவேக் இன்று காலமான நிலையில் அவருக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர் என்பதும், இரங்கல் தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் நடிகர் சிம்பு, விவேக் மறைவு குறித்து இரங்கல் அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

அன்பு அண்ணன்‌. நம்‌ சின்னக்‌ கலைவாணர்,‌ இன்‌ முகம்‌ மாறாத மனிதர்‌, எல்லோரிடமும்‌ இயல்பாகப்‌ பழகுபவர்‌, கணக்கற்ற மரக்கன்றுகளை நட்டு காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்கக்‌ கொடுத்தவர்‌ இன்று மூச்சற்றுவிட்டார்‌ என்ற பெருந்துயரச்‌ செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்‌.

சைக்கிளிங்‌, உடற்பயிற்சி, யோகா, இசையென மிக ஆரோக்கியமான முன்னுதாரணமாக நான்‌ ஆச்சரியப்படும்‌ மனிதர்‌ நடிகர்‌ விவேக்‌ சார்‌.

பண்பாளர்‌. இவ்வளவு சீக்கிரம்‌ இழப்போமென்று கனவிலும்‌ நினைத்ததில்லை. தமிழ்‌ சினிமாவில்‌ எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம்‌ பகுத்தறிவு கருத்துகளைப்‌ போதித்து வந்தார்‌. மரங்களை நடுங்கள்‌ என அய்யா அப்துல்‌ கலாம்‌ காட்டிய வழியை இளைஞர்கள்‌ மத்தியில்‌ விரைவாகக்‌ கொண்டு சென்று செயல்படுத்திய செயல்‌ வீரர்‌.

பத்மஸ்ரீவிருதுக்குப்‌ பொருத்தமானவராக நிறைந்திருந்தார்‌

அவர்‌ மறைந்தாலும்‌, அவர்‌ செய்து சென்றிருக்கிற செயல்கள்‌ அவரை என்றும்‌ நகைச்சுவை. நடிகராக, கருத்தாழம்‌ மிக்க மனிதராக நிலைத்திருக்க வைக்கும்‌. நம்மிடையே நிலைத்திருப்பார்‌.

என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர்‌ எப்போதும்‌ என்‌ நல்லது, எடுக்கும்‌ முயற்சிகள்‌ பற்றி விசாரித்துக்‌ கொண்டேயிருப்பார்‌.

அவருக்கு நாம்‌ செய்ய வேண்டியது, அவர்‌ செய்து வந்ததை நாம்‌ தொடர்ந்து செய்வதுதான்‌ உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்‌.

நான்‌ அவருக்கு அஞ்சலி செலுத்தும்‌ விதமாக, மரக்கன்று வைக்க இருக்கிறேன்‌. சின்னக்‌ கலைவாணரை நேசிக்கும்‌ ஒவ்வொருவரும்‌ குறைந்த பட்சம்‌ ஒரு மரக்கன்று நட்டு அவரது இதயத்துக்கு நெருக்கமான அஞ்சலியை செலுத்துவோம்‌ என அன்போடு அனைவரையும்‌:
கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply