shadow

 

கோயில்களில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஓர் அமிர்தம் பேரீச்சம்பழம். பல மருத்துவக் குணங்களைக்கொண்ட பேரீச்சையின் சிறப்பைப் பற்றிக் கூறுகிறார், கோவை கிணத்துக்கடவு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவர் சசிகலா.

பேரீச்சம்பழத்துக்கு, சித்த மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் சிறப்பான இடம் உண்டு. பேரீச்சம்பழம், பித்தத்தைப் போக்கும்; தாகத்தைத் தணிக்கும். நாக்கில் ஏற்படும் பாதிப்பால் தோன்றும் சுவையின் மைப் பிரச்னைக்கு, இது ஒரு நல்ல நிவாரணி. மேலும், நாள்பட்ட மலச்சிக்கலையும் தீர்க்கும்.

பேரீச்சம்பழத்தில் ஈயம், இரும்புச் சத்துக்கள் அதிகம். வளரும் குழந்தைகளுக்கும் இளம்பெண்களுக்கும் மிகவும் நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் எடுத்துக் கொள்வதால், இரும்புச் சத்தை எளிதாகப் பெறலாம். பேறுகாலப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு நல்லதோர் இயற்கை மருந்து.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், ரத்தக்குழாய்கள் வலுப்பெற்று, ரத்த அழுத்தம் சீராகும். அனீமியா என்ற ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள், பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், விரைவில் குணம் பெறலாம். மேலும் உடலில் ரத்தம் குறைந்தவர்களுக்கு, ரத்த விருத்தி செய்ய உதவுகிறது. உடல் மெலிந்தவர்கள் பேரீச்சம்பழத்தை உண்பதால், நல்ல பொலிவான தேகம் பெறலாம். மாரடைப்பு உள்ளவர்களுக்கு, பேரீச்சம்பழம் மிகவும் நல்லது. இதயத்தசை வலுப்பெற உதவும். ஏற்கெனவே பருமனான தேகம் உடையவர்கள் மற்றும் நீண்ட நாள் செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது உடலை இளைக்க விடாது. சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு, சிறந்த அருமருந்தாக இருக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பலவீனமடைந்து சோர்வாகக் காணப்படுவார்கள். இவர்கள் தினமும் 4 பேரீச்சம்பழம் சாப்பிட்டுவர, புத்துணர்ச்சி பெறுவது நிச்சயம்.”

பேரீச்சம்பழத் தேனூறல்

தினமும் பேரீச்சம்பழத்தை அரைத்து, பாலுடன் கலந்து அருந்தலாம். தேனில் ஊறவைத்து, தினமும் காலை வெறும் வயிற்றில் மற்றும் இரவு உணவுக்குப் பிறகு என 48 நாட்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் நல்ல வலிமையும் பொலிவும் பெறும்.

பேரீச்சைக் காயும்… பாயும்!

பேரீச்சை மரத்தின் காயும் பழமும் உணவாகப் பயன்படுகின்றன. இந்த மரத்திலிருந்து செய்யப்படும் பாய்க்கு, ஈச்சமரப் பாய் என்று பெயர். ஈச்சமரப் பாயில் தூங்கினால், வாத நோய்கள் வராது. வயிற்றுப்புண் வராமல் தடுக்கும். பேரீச்சம் காய், சிறந்த உமிழ் நீர் பெருக்கியாகவும், பசியைத் தூண்டும் பொருளாகவும் பயன்படுகிறது. பேரீச்சை மரத்தின் குருத்து கப நோய்களையும் தீர்க்கும்.

Leave a Reply