ரூ.2 பால் விலை திடீர் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் உள்பட பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து வரும் நிலையில் மற்றொரு அத்தியாவசிய பொருளான பால் விலையும் நாளை முதல் ரூ.2 அதிகரிக்கின்றது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலுக்கு அடுத்தப்படியாக அதிக அளவில் விற்பனையாவது ஆரோக்யா பால் தற்போது விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மற்ற பால் பாக்கெட் விலையும் விரைவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனமான “ஹட்சன் நிறுவனம் நாளை வெள்ளிக்கிழமை (1-ந்தேதி) முதல் தங்களுடைய “ஆரோக்யா” பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2,00 ரூபாய் உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. ஹட்சன் நிறுவனத்தின் தன்னிச்சையான இந்த விலை உயர்விற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சுமார் 95 சதவீதம் தேனீர் கடைகள், உணவகங்கள் தனியார் பாலினையே உபயோகப்படுத்தி வருவதால் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வின் காரணமாக தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விற்பனை விலையும் கடுமையாக உயரும். எனவே ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கின்ற வகையிலான இந்த பால் விலை உயர்வை ஹட்சன் நிறுவனம் மறு பரிசீலனை செய்து அதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.