ரிலீஸ் ஆகும் படத்தை வீட்டில் இருந்தே பார்க்கலாம்: முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42வது பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அதன் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, செப்டம்பர் 5ஆம் தேதி முதல் ஃபைபர் கேபிள் வழியான, அதிவேக இணைய சேவையை வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்வதாக தெரிவித்தார்.

மாதந்தோறும் குறைந்தபட்சம் 700 ரூபாய் முதல் இந்த சேவை கிடைக்கும் எனவும் ஒரே ஃபைபர் கேபிள் சேவையில் அதிவேக இணையசேவை, டி.வி. சேனல்கள், புதிய திரைப்படங்களை பார்க்கும் வசதி கிடைக்கும் எனவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

ஜியோ செட்டாப் பாக்ஸ் மூலம் இந்தியாவின் முதல் மல்டி பிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படுகிறது என தெரிவித்த முகேஷ் அம்பானி, ஜியோ பைபர் தொடக்க சலுகையாக டிவி மற்றும் செட் டாப் பாக்ஸ் இலவசம் எனவும் கூறினார். ஜியோ பைபரில் இணைய சேவை வேகம் நொடிக்கு 1 ஜி.பியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு மாதத்தில் பத்து கோடி இந்தியர்கள் ஜியோ மூலமாக வீடியோ கால் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜியோ ஃபைபர் மூலம் மிக குறைந்த செலவில் 5ஜி தொழில்நுட்பத்துக்கு முன்னேற முடியும் என்றும் ஆயிரத்து 600 நகரங்களில் 2 கோடி இல்லங்களிலும் ஒன்றரை கோடி தொழில் நிறுவனங்களிடமும் ஜியோ ஃபைபர், இந்த ஆண்டு சென்றடையும் எனவும் முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அதற்கான சிறப்பு திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறிய அவர், ஜியோ பைபர் மூலம் திரையரங்குகளில் படம் வெளியாகும் அதே நேரம் வீட்டில் இருந்தே அந்த படத்தை பார்க்க முடியும் என்றும், 2020 முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

ஜியோ செல்போன் சேவை சந்தாதாரர் எண்ணிக்கை 34 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் ஒவ்வொரு மாதமும் ஜியோவில் 10 லட்சம் பேர் இணைந்து வருவதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.

Leave a Reply