shadow

ராணுவ வீரர்களுக்காக ஒரு யாகம்!

1.3பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உஜ்ஜயினியில் நடைபெறும் ‘சிம்ஹஸ்தா’ எனும் கும்பமேளா, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று தொடங்கியது. முதல் நாளே ஆண்களும் பெண்களுமாகப் பல லட்சம் பக்தர்கள் திரண்டுவிட்டனர். 13 அகாராக்கள் – பிரபல ஆசிரமங்களின் துறவியர் ஆகியோருடன் மத்தியபிரதேச மாநிலத்தின் முதல்வர் ஷிவ்ராஜ்சிங் செளஹான் ‘ஸாஹி ஸ்னான்’ எனப்படும் புனித நீராடலில் பங்கேற்றார்.

உஜ்ஜயினி கும்பமேளாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், பாதுகாப்பு கருதி காவல் துறையினரின் கெடுபிடிகள் சற்று கூடுதலாகவே இருந்தன. கும்பமேளா நடைபெறும் இடத்துக்கு ரயில்நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. நடந்து செல்லவேண்டும் என்பதால், பக்தர்கள் சற்று சிரமப்படவே செய்தனர்.

மற்றபடி, அவர்களின் தாகம் தணிக்க ஆங்கங்கே தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுத்தமான, சுகாதாரமான தண்ணீரை பக்தர்களுக்கு வழங்குவதில் தொண்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டன. இந்தோரில் உள்ள சத்யசாயிசேவா சமிதியைச் சேர்ந்தவர்கள், பக்தர்களைத் தேடிச் சென்று தண்ணீர் வழங்கிய காட்சி வித்தியாசமாகவும் பாராட்டும்படியும் இருந்தது.

‘‘தண்ணீர் வழங்குவது மட்டுமல்ல; எங்கள் அமைப்பில் பேரிடர்கால மீட்புப் பணியில் அரசு பயிற்சி பெற்ற பலர் இருக்கிறார்கள். ஆகையால், தேவைப்படும்போது பேரிடர் மீட்புப் பணிகளுக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்’’ என்றார் இந்தோர் மாவட்ட சாயி சங்கத்தின் பேரிடர் மீட்புக் குழுவின் பொறுப்பாளர் அமர் சந்த்னானி.

இந்தப் பெருவிழாவை ஒட்டி ஏற்பாடாகி யிருக்கும் நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கது, ஆதிவிஷ்ணு யக்ஞாஞ்சலி!

உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு யக்ஞாஞ்சலி

நாட்டின் எல்லைப் பாதுகாப்பு, பேரிடர் மீட்பு போன்ற பணிகளின்போது உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் ஆத்ம சாந்தி வேண்டியும், அவர்களுடைய குடும்ப நலன் வேண்டியும், டேராடூனில் உள்ள ஆதிவிஷ்ணு மஹா யக்ஞ சேவா சமிதி நிறுவனர் குருஜி பாலக் யோகேஸ்வர்தாஸ் மஹராஜ் 2003-ம் ஆண்டு ஜம்முதாவியில் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து யக்ஞாஞ்சலி நடத்தி வருகிறார்.

இப்போது, 25-வது யாகம் உஜ்ஜயினியில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கேட்டபோது, “பாதுகாப்புப் பணியில் உயிர்நீத்த வீரர் களின் ஆத்ம சாந்திக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலன் வேண்டியும் இது வரை கார்கில், உதம்பூர், ஹரித்வார், அலஹாபாத் போன்ற இடங்களில் யாகம் நடத்தியுள்ளோம்.

25-வது யாகம் உஜ்ஜயினியில் ஒரு மாத காலத்துக்கு நடைபெற உள்ளது. 108 யாக குண்டங்களுடன் கூடிய யாகசாலை அமைக் கப்பட்டு, அந்தக் கூடாரத்தின் உச்சியில் நமது தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்க, நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் பெயர்களுடன் கூடிய உருவப் பதாகைகள் யாகசாலை முகப்பில் வைக்கப்பட்டிருக்கும்.

இந்த யாகத்தின் பிரதான சிறப்பே, உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்ப வாரிசுகள் அங்கே வரவழைக்கப்பட்டு, அவர்களையே வேள்வி குண்டத்தின் முன் அமரவைத்து யாகத்தில் பங்கேற்கச் செய்கிறோம். அது மட்டுமல்லாமல், அவர்களுக்கு எங்கள் சமிதியின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும்செய்து, அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம்” என்றார் யோகேஸ்வர்தாஸ் மஹராஜ்.

ஆன்மிகத்தையும் தேசியத்தையும் போற்றும் அவர்களின் இந்தத் திருப்பணியை வியந்து பாராட்டி விடைபெற்றோம்.

Leave a Reply