shadow

 விண்வெளிக்குச் செலுத்திய ராக்கெட்டை பூமிக்குக் கொண்டுவருவது சாத்தியமாகியிருக்கிறது
rocket
செயற்கைக்கோளைச் சுமந்தபடி ஒரு ராக்கெட் பெரும் நெருப்பைக் கக்கிக்கொண்டு மேலே கிளம்புகிறது. சில நிமிடங்கள் கழித்து அந்த செயற்கைக்கோள் பூமியைச் சுற்றும் வகையில் செலுத்தப்படுகிறது. ராக்கெட்டைச் செலுத்துவதில் வெற்றி. ஆனால், செயற்கைக்கோளைச் செலுத்தி முடிக்கும்போது ராக்கெட் முற்றிலுமாக அழிந்துவிடுகிறது. அநேகமாக ராக்கெட்டின் சிறு பகுதிகூட மிஞ்சாது. செயற்கைக்கோள்களைச் செலுத்தும் ஒவ்வொரு முயற்சியிலும் ராக்கெட் அழிகிறது. மறுபடி ஒரு செயற்கைக்கோளைச் செலுத்த வேண்டும் என்றால், பெரும் செலவில் முற்றிலும் புதிதாக ஒரு ராக்கெட்டை உருவாக்க வேண்டும். பல ஆண்டுகாலமாக இப்படித்தான் நடந்துவருகிறது.

ஆனால், இப்போது முதல் தடவையாக ஒரு ராக்கெட் உயரே சென்று அழியாமல் முழுவதுமாகத் தரை இறங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த இந்நிகழ்வு ராக்கெட் துறையில் மிகப் பெரிய சாதனை.

‘பால்கன் 9’

அமெரிக்காவில் ‘ஸ்பேஸ் – எக்ஸ்’ எனும் நிறுவனம் உயரே செலுத்திய ‘பால்கன் 9’ எனும் ராக்கெட் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. உயரே கிளம்பும்போது எவ்விதம் நெருப்பைக் கக்கியபடி மேலே சென்றதோ அதேபோல நெருப்பைக் கக்கியபடி செங்குத்தாகக் கீழ் நோக்கி இறங்கி, மெல்லத் தரையில் வந்து உட்கார்ந்துகொண்டது. இந்த ராக்கெட்டைப் புதுப்பித்து மறுபடி உயரே செலுத்த முடியும். தாங்கள் உருவாக்கியுள்ள புதிய தொழில்நுட்பத்தின்படி ஒரே ராக்கெட்டை 40 தடவை பயன்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராக்கெட் யுகம் தோன்றியதிலிருந்தே இருந்துவருகிற அடிப்படைப் பிரச்சினை, ஒரு தடவை பயன்படுத்திய ராக்கெட்டை மறுபடி பயன்படுத்த முடியாமல் அது முற்றிலும் அழிந்துவிடுவதுதான்.

மூன்று அடுக்குகள்

ராக்கெட் ஏவுதளத்தில் ஆயத்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ள ராக்கெட், செங்குத்தாக நிறுத்தப்பட்ட ஒரு பென்சில்போலக் காட்சியளிக்கிறது. பார்வைக்கு அது ஒரே ஒரு ராக்கெட்போலத் தோன்றினாலும், உண்மையில் அது ஒன்றின்மீது ஒன்றாகப் பொருத்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று ராக்கெட்டுகள் ஆகும். இவற்றை அடிப்புற ராக்கெட், நடுப் பகுதி ராக்கெட், நுனிப்புற ராக்கெட் என்று வர்ணிக்கலாம்.

ராக்கெட் உயரே கிளம்பிய சில நிமிடங்களில் அடிப்புற ராக்கெட் எரிந்து முடிந்து தனியே கழன்று கீழ் நோக்கி விழும். நடுப் பகுதி ராக்கெட்டும் அவ்விதமே எரிந்த பின்னர் கழன்றுகொள்ளும். நுனிப்புற ராக்கெட் கடைசியில் மிக அதிக வேகத்தில் சுமார் 250 அல்லது 300 கிலோ மீட்டர் உயரத்தை எட்டும்போது செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுவிடுகிறது.

ராக்கெட்டை இவ்விதம் மூன்று அடுக்குகளாக வடிவமைத்துச் செலுத்துவதில் ஆதாயம் இருக்கிறது. அடிப்புற அடுக்கு எரிந்து முடிந்து கழன்றுகொள்ளும்போது மொத்த ராக்கெட்டின் எடை குறைகிறது. எனவே, அதிக வேகத்தைப் பெற முடிகிறது. இரண்டாவது அடுக்கும் இவ்விதம் கழன்றுகொள்ளும்போது மேலும் வேகம் கிடைக்கிறது. கீழ் நோக்கி விழும் இரண்டு அடுக்குகளும் காற்று மண்டலத்தில் நுழையும்போது அதிகமாகச் சூடேறித் தீப்பற்றி அழிந்துவிடுகின்றன. மூன்றாவது நுனிப்புற அடுக்குக்கும் அதே கதிதான். எனவே, ஒரு ராக்கெட்டை உருவாக்குவது பெரும் செலவு பிடிக்கிற விஷயமாகவே இருந்துவந்துள்ளது.

விண்வெளி ஓடங்கள்

ராக்கெட்டுகள் இவ்விதம் அழியும் பிரச்சினையைத் தவிர்க்கும் நோக்கில்தான் விண்வெளி ஓடம் எனப்படும் ஸ்பேஸ் ஷட்டில் வாகனத்தை அமெரிக்காவின் நாஸா 1980-களில் உருவாக்கியது. அது செயற்கைக்கோள்களை மட்டுமன்றி விண்வெளி வீரர்களையும் ஏற்றிச் செல்வதாக இருந்தது. அமெரிக்கா தயாரித்த விண்வெளி ஓடம் உயரே சென்று, பணிகளை முடித்துக்கொண்டு கிளைடர் விமானம்போலக் கீழே வந்து இறங்கியது. இதனைச் செப்பனிட்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடிந்தது. ஆனால், விண்வெளி ஓடங்களில் சில வடிவமைப்புப் பிரச்சினைகள் இருந்தன. தவிர, இவற்றை இயக்க நிறைய செலவானது. விபத்து வாய்ப்பும் இருந்தது. எனவே, வயதாகிவிட்ட நிலையில் விண்வெளி ஓடங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் அருங்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டன. ரஷ்யாவும் இதேபோல ஒரு விண்வெளி ஓடத்தைத் தயாரித்தது. ஆனால், அது ஒரே ஒரு தடவை பறந்ததோடு சரி.

அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல நாடுகளிலும் அரசு சார்ந்த விண்வெளி அமைப்புகள் மட்டுமே ராக்கெட்டுகளை செலுத்திவந்த நிலைமை கடந்த பல ஆண்டுகளில் மாறி விட்டது. இப்போது பல தனியார் நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன. ராக்கெட்டை மீண்டும் பூமிக்குத் திரும்பச் செய்வதில் இந்த நிறுவனங்களில் சில ஈடுபட்டன. ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி நிறுவனம் இப்போது அதில் வெற்றிகண்டுள்ளது.

திரும்பிவந்த ராக்கெட்

டிசம்பர் 21-ல் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் 11 சிறிய செயற்கைக்கோள்களைச் சுமந்துகொண்டு அமெரிக்காவின் பிரபல கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் இரண்டு அடுக்கு ராக்கெட் ஆகும். சில நிமிடங்களில் அடிப்புற ராக்கெட் எரிந்து தீர்ந்தது. பின்னர், அது வட்டமடித்து அடிப்புறப் பகுதி கீழ் நோக்கி அமைந்தபடி மெதுவாக இறங்க ஆரம்பித்தது.

கீழே இறங்கும் ராக்கெட்டின் வேகம் குறைக்கப் படாவிட்டால் அது மிகவும் சூடேறி தீப்பற்றிவிடும். எனவே, ராக்கெட்டின் அடிப்பகுதி வழியே நெருப்பு பீச்சிட்டது. இதற்கென முன்கூட்டித் திட்டமிட்டு அந்த ராக்கெட்டில் கூடுதல் எரிபொருள் வைக்கப்பட்டிருந்தது. இது அந்த ராக்கெட் கீழே இறங்கும் வேகத்தைக் குறைத்தது. பின்னர், அது மெல்லத் தரையைத் தொட்டது. கீழே இறங்கும்போது, விழுந்துவிடாமல் இருக்க 15 மாடிக் கட்டிடம் அளவுக்கு உயரம் கொண்ட அந்த ராக்கெட்டின் அடிப்புறத்தில் நான்கு கால்கள் பொருத்தப்பட்டிருந்தன.

கேப் கெனவரல் தளத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இதற்கென நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் அந்த ராக்கெட் தரை இறங்கியது. இதற்கு முன்னர் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் செய்த முயற்சிகள் தோல்வி கண்டன. இப்போது வெற்றி கிட்டியுள்ளது.

அடிப்புறப் பகுதி இவ்விதம் இறங்கியபோது, பால்கன் ராக்கெட்டின் இரண்டாவது கட்ட ராக்கெட் தொடர்ந்து உயரே சென்று 11 செயற்கைக்கோள்களையும் செலுத்தி வெற்றி கண்டது. அந்த இரண்டாவது கட்ட ராக்கெட் அதன் பிறகு கீழ் நோக்கி இறங்கி, காற்று மண்டலத்தில் நுழைந்தபோது தீப்பற்றி அழிந்தது.

பால்கன் ராக்கெட்டின் இரண்டாவது அடுக்கையும் இதேபோல மீட்பது ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் எதிர்காலத் திட்டம். இது வெற்றி கண்டால் ராக்கெட்டு களைச் செலுத்துவதற்கு ஆகும் செலவு பெருமளவு குறைந்துவிடும்.

பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களையும் செலுத்தித் தருவது உலகில் இப்போது நல்ல பணம் கொழிக்கும் தொழிலாகும். உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்களே இதில் ஈடுபட்டுள்ளன. ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் எதிர்காலத்தில் மற்றவர்களுக்குக் கடும் போட்டியை அளிக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply