யாருமே நிக்கலை, 100மீட்டர் வரை தூக்கி சென்றோம்: இளம்பெண் விபத்து சம்பவத்தில் பரிதாபம்

சென்னை பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் ஒருவர் மீது அரசியல் கட்சி ஒன்று பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் அந்த இளம்பெண் பரிதாபமாக பலியானார்.

சென்னை பள்ளிக்கரணை சாலையில் சுபாஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் திடீரென அவர் மீது சரிந்தது. இதனால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த சுபாஸ்ரீ, சாலையில் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதால் அவர் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மணிகண்டன் என்பவர் அரசியல் கட்சியின் பேனர் விழுந்ததாலேயே அந்த பெண் நிலைதடுமாறி விழுந்ததாகவும், பேனர்கள் அனைத்துமே சரியாக கட்டப்படவில்லை என்றும் கூறினார். இளம்பெண் கீழே விழுந்தவுடன் பின்னால் வந்த லாரி டிரைவர் எவ்வளவோ முயற்சி செய்தும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் லாரி பெண்ணின் மீது ஏறியதாகவும், இதில் படுகாயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் உடனடியாக வரவில்லை என்றும், சாலையில் சென்ற யாரும் அந்த பெண்ணை காப்பாற்ற முன்வராததால் 100 மீட்டர் வரை அந்த பெண்ணை கையில் தான் தூக்கி சென்று பின்னர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் என்றும் ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வரும் போலீசார் லாரி டிரைவரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply