shadow

மனச்சோர்வை விரட்ட 6 வழிகள்!

மனச்சோர்வுக்குக் காரணங்களைத் தேடினாலே சோர்வு வந்துவிடும். அந்த அளவுக்குக் காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தற்போது, பெரும்பாலானோர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு, அதனுடனேயே வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வை எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது, மனச்சோர்விலிருந்து எப்படி விடுபடுவது என்பதற்கான எளிய வழிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

நிறைவான தூக்கம்

மண்டையை உடைக்கும் மனஉளைச்சலைச் சமாளிக்க, தெளிவான மனம் வேண்டும். அதற்கு நிறைவான தூக்கம் அவசியம். தூங்காமல் இருந்து அல்லது சரியாகத் தூங்காமல் பிரச்னை குறித்துச் சிந்தித்துக்கொண்டே இருந்தால், மனநோயாளியாக மாறும் வாய்ப்பு அதிகம். தூங்கும் முன் பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பதை அவசியம் தவிர்த்து விடுங்கள்.

ஒரு பயிற்சியை உங்களுக்கு எனத் தேர்வு செய்யுங்கள்

நீச்சலோ, ஏரோபிக்ஸோ உங்களுக்கான ஒரு பயிற்சியைத் தேர்ந்தெடுத்து, அதில் அரை மணி நேரம் முழு மனதோடு செலவழிக்க வேண்டும். அந்த அரை மணி நேரத்தில், நீங்கள் வேறு… உங்களது பிரச்னைகள் வேறு என்பதை மனதுக்குப் புரியவைத்துவிடுங்கள்.

நம்பிக்கை மனிதர்களைப் படியுங்கள்

நாளிதழ், பத்திரிகை, இணையம் என எல்லா இடங்களிலும் நம்பிக்கை மனிதர்களைப் பார்க்க முடியும். அவர்களின் கதையைப் படியுங்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். உங்களுக்கான வழிகளும் பிறக்கும். நம்பிக்கை வாசகங்களைத் தேடிப் பிடித்துப் படியுங்கள். நம்பிக்கை தரும் பாடல்களை அடிக்கடி கேளுங்கள்.

சரியான நேரத்துக்கு வேலையை முடித்துவிட்டுக் கிளம்புங்கள்

வேலைதான் எல்லாமுமே என்ற எண்ணத்தை மாற்றுங்கள். வேலையும் உங்களுக்கு ஒரு வேலை எனப் புரிந்துகொண்டு, வேலையை மிகச் சரியாக, சரியான நேரத்துக்கு முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள். கசப்பான உணர்வுகளை அலுவலக வாசலில் புதைத்துவிட்டுச் செல்வது நல்லது.

பிடித்த உறவுகளுடன் சில நிமிடங்கள்

நண்பர், அம்மா, அப்பா, பாட்டி, செல்லப் பிராணி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்… அவர்களுக்கு என நேரம் ஒதுக்கி, அவர்களுடன் செலவழியுங்கள். சிலருக்கு ஷாப்பிங் பிடிக்கும், அவர்கள் மனச்சோர்விலிருந்து தப்பிக்க அடிக்கடி ‘விண்டோ ஷாப்பிங்’ செய்யலாம்.

உண்ணும் உணவைக் கவனியுங்கள்

போதுமான காய்கறி, பழங்கள், சிறுதானியங்கள், தானியங்கள், பருப்பு-பயறு வகைகள், நிறைவான கொழுப்புச்சத்து உள்ள உணவுகள் போன்ற அனைத்தும் சரியான அளவில் தினசரி உண்ண வேண்டும்.

Leave a Reply