shadow

மத்திய நிதிநிலை அறிக்கை: ரியல் எஸ்டேட் துறைக்கு என்னென்ன சாதகம்?

உயர் பண மதிப்பு நீக்கத்தால் ரியல் எஸ்டேட் துறை தள்ளாட்டத்துக்கு உள்ளானது. பல இடங்களில் பணிகள் முடங்கின. ஆனால், 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமாக சில அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய நிதி நிலை அறிக்கையில் ரியல் எஸ்டேட் துறைக்கு கூறப்பட்டுள்ள அம்சங்கள் என்னென்ன?

எல்லோருக்கும் வீடு என்ற திட்டத்தின் அடிப்படையில் மலிவு விலை வீடுகளுக்கு மானியம் வழங்குவது உள்பட சலுகைகளை மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிவருகிறது. இது 2017-18-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலும் எதிரொலித்துள்ளது. நிதி நிலை அறிக்கையில் மலிவு விலை வீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாகக் குறைந்த விலை வீடுகளுக்கான பரப்பளவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த நிதியாண்டில் குறைந்த விலை வீடுகளின் ‘பில்ட்அப் ஏரியா’வின் பரப்பளவானது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெரு நகரங்களில் 30 சதுர மீட்டர் அளவாகவும் நாட்டின் பிற நகர்ப்புறங்களில் பரப்பளவு 60 சதுர மீட்டர் அளவாகவும் வரையறுக்கப்பட்டிருந்தது. தற்போது இதில் ‘பில்ட்அப் ஏரியா’ என்பதை ‘கார்பெட் ஏரியா’ என்று மத்திய அரசு திருத்தியுள்ளது.

இதன்மூலம் மலிவு விலை வீடுகளின் பரப்பளவை இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கட்டிக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 60 சதுர மீட்டர் ‘கார்பெட் ஏரியா’ என்ற விதிமுறை நான்கு மெட்ரோ நகரங்களை ஒட்டியுள்ள புறநகர்ப்பகுதிகளுக்கும் பொருந்தும் என்றும் திருத்தப்பட்டுள்ளது. இதனால் பெரு நகரங்களை ஒட்டியுள்ள புற நகர்ப் பகுதிகளில் பிற நகரங்களில் உள்ள அளவுக்கு வீட்டைக் கட்டிக் கொள்ள முடியும்.

மலிவு விலை வீடுகளுக்கான சலுகைகளைப் பெறுவதிலும் சாதகமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு முன்பு மலிவு விலை வீட்டுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி 3 ஆண்டு காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தக் கால அளவு 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவும் மலிவு விலை வீடு கட்டுபவர்களுக்கு சாதகமான அம்சமாகும்.

கட்டுநர்களுக்கு சாதகம்

பொதுமக்களுக்கு மட்டுமல்லா மல் கட்டுநர்களுக்கும் சில சாதகமான அம்சங்கள் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனையாகமல் ஏராளமாக உள்ளன. இப்படிக் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்கு தயார்நிலையில் இருக்கும் வீடுகளுக்கு வாடகை வருவாய்க்கான வரியைக் கட்டுநர்கள் செலுத்தி வருகிறார்கள். இந்த வரிவிதிப்பு முறையின்படி ஒரு வேளை வீடுகள் விற்பனை ஆகவில்லை என்றால் கட்டுநர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே அந்த இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு நிதிநிலை அறிக்கையில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதாகச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டு முடிந்தபிறகு கட்டுநர்கள் வரியைச் செலுத்தினால் போதுமானது என சொல்லப்பட்டுள்ளது.

இதேபோல நிலம் மற்றும் கட்டுமானங்களுக்கான மூலதன லாப வரியிலும் ஓரிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் மூலதன லாபம் என்பது ஒரு வீடோ அல்லது மனையோ குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழித்து விற்கப்படும்போது கிடைக்கும் லாபம் ஆகும். அந்த லாபத்துக்கும் வரி செலுத்த வேண்டும். அப்படி அசையா சொத்துகளிலிருந்து லாபம் பெறுவதற்கான அதிகபட்ச கால அளவு முன்பு 3 ஆண்டுகளாக இருந்தது. தற்போது அந்த கால அளவு 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வரை 1981–ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு விலைக் குறியீட்டெண் மதிப்பிடப்பட்டு வருகிறது. அதற்குப் பதிலாக 2001–ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு விலைக்குறியீட்டெண் மதிப்பிடப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூலதன லாப வரியின் அளவு குறைந்து சொத்து விற்பனை அதிகரிக்கும் வாய்ப்புகள் கூடும். மூலதன லாபத்தை முதலீடு செய்வதை ஊக்குவிக்கும்வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மூலதன லாபத்துக்கான வரி கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகே மூலதன லாப வரி விதிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் துறை தேக்கமடைந்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறைந்த விலை வீடுகளைக் கட்டும் கட்டுநர்களுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை கட்டுநர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறையினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள சலுகைகள் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply