மத்திய தர வீட்டுக் கடன்களுக்கு வட்டி மானியம்: மத்திய அரசு வழங்குகிறது
ரூ.6 லட்சம் முதல் 18 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நடுத்தர குடும்பத்தினர் பெறும் வீட்டுக் கடனுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நடுத்தர குடும்பத்தினருக்கு ஒரு நல்ல செய்தியைத் தாங்கி வந்திருக்கிறது மத்திய அரசின் அறிவிப்பு. இதுகுறித்து கடந்த புதன்கிழமை வெளியான அறிவிப்பில், ரூ.6 லட்சம் முதல் 18 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நடுத்தர குடும்பத்தினர் பெறும் வீட்டுக் கடனுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த வழிமுறைப் பட்டியலை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். இதன்படி, ரூ.6 லட்சம் முதல் 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு அதிகபட்சம் ரூ.9 லட்சத்துக்கு 4% வட்டி மானியம் வழங்கப்படும். அதேபோல் ரூ. 18 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு அதிகபட்சம் ரூ.12 லட்சத்துக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1-ல் இருந்து வீட்டுக் கடன் பெற்றவர்கள் மற்றும் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளவர்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் மானியம் கிடைக்கும். கடனை அடைப்பதற்கான அதிகபட்சக் காலம் 20 ஆண்டுகளாகும்.
பயனாளிகளின் மாதாந்திர தவணைத் தொகை (ஈஎம்ஐ) சுமையைக் குறைக்கும் வகையில் மொத்த வட்டி மானியமும் ஒரே தவணையில் ஒட்டுமொத்தமாக அளிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.