ப.சிதம்பரத்தின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

ராஜ்யசபாவில் பட்ஜெட் உரை மீதான தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் குறித்த எழுப்பிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்தியாவை 5 ஆண்டுகளில் 5 டிரில்லயன் டாலர் பொருளாதார பலத்தை எட்ட இலக்கு வைத்திருப்பதாக பிரதமர் மோடி அரசு அறிவித்துள்ளது குறித்து பேசிய ப.சிதம்பரம், இந்தியா தனது பொருளாதார இலக்கை எட்டுவதற்கு நிதியமைச்சரோ பிரதமரோ தேவையில்லை என்று கூறினார். இதற்கு பதிலடி தந்த நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடி அரசின் பொருளாதார இலக்கை நீர்த்துப் போக செய்ய ப.சிதம்பரம் முயற்சிப்பதாகவும், பிரதமர், நிதியமைச்சர் இன்றி பொருளாதாரம் தாமாகவே முன்னேற்றம் அடையும் என்றால் இத்தனை பேர் நாடாளுமன்றத்தில் எதற்காக அமர்ந்திருக்கிறோம் என்றும் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

மேலும் இதே நடைமுறையை மன்மோகன்சிங் அரசும் பின்பற்றியதா என்று சிதம்பரத்திற்கு கேள்வி எழுப்பிய அவர், ஊழல்களால் இந்தியப் பொருளாதாரத்தை காங்கிரஸ் பின்னடைய செய்து விட்டதாக குற்றம் சாட்டினார். வங்கிகளில் வாராக்கடன் பிரச்சினையைத் தீர்க்கவும், வங்கிகளை வலுப்படுத்தவும் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் நிதியமைச்சர் பட்டியலிட்டார்.

Leave a Reply