பொள்ளாச்சி விவகாரம் குறித்து பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜின் கவிதை
கடந்த ஆண்டு வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘பரியேறும் பெருமாள். இந்த படத்தால் பெரும்புகழ் பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ், பொள்ளாச்சி விவகாரம் குறித்து கவிதை ஒன்றை தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அந்த கவிதை இதோ:
ஒரு பெண் பிள்ளையின் தகப்பனாக
எனக்கு எந்தப் பயமும் இல்லை பதட்டமுமில்லை
என் மகளுக்கு நான் கடலைக் காட்டுவேன்
கடலின் அழகைக் காட்டுவேன்
அழகின் ஆழம் காட்டுவேன்
ஆழத்தில் உயிர்களைக் காட்டுவேன்
உயிர்களின் விநோதம் காட்டுவேன்
விநோதங்களின் விபரீதங்களைக் காட்டுவேன்
விபரீதங்களின் காரணம் காட்டுவேன்
காரணங்களின் முடிவுகளைக் காட்டுவேன்
முடிவுகளின் இழப்புகளைக் காட்டுவேன்
இழப்புகளிலிருந்து மீள வலு நீச்சல் காட்டுவேன்
நீச்சலின் நியாயம் காட்டுவேன்
நியாயத்தின் நிம்மதி காட்டுவேன்
இத்தனைக்கும் பிறகு அவள் பயந்தால்
மறுபடியும் கடல் காட்டுவேன்
அதன் அழகைக் காட்டுவேன்
அது அவளுடைய கடல்
அது அவளுடைய அலை
அவள் நம்புகிறவரை அவளுக்கு கடல் காட்டுவேன்
ஆழம் போவதும்
கரை நடப்பதும்
அவள் உரிமை
Leave a Reply
You must be logged in to post a comment.