shadow

smokesஒரு வீட்டில், குடும்பத் தலைவர் தொடர்ந்து புகை பிடிப்பவர் எனில், அவர் விடும் அளவில்லாத புகையால், அந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவருமே நோய்வாய்ப்படுகின்றனர் என்பது எவ்வளவு கொடுமையான விஷயம்!  

இது எந்த அளவுக்குத் தீவிரமான விஷயம் என்பது, அதன் பாதிப்புகளை பொது மருத்துவர் நா.எழிலன் விவரித்தபோது புரிந்தது. 

‘சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள்கூட, அருகில் உள்ளவர்கள் புகைத்து வெளியிடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால், மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களைத்தான் ‘பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’ என்கிறோம். 1980 – 90-களில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், புகை பிடிக்காத பலரும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்கி இறந்தனர்.  பிறகுதான் அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அத்தனை பேரின் வீட்டிலும் சிகரெட் புகைப்பவர் (Active smokerMain ) ஒருவர் இருந்திருக்கிறார். இந்த அதிர்ச்சிக் கண்டுபிடிப்புக்குப் பிறகு, 2006-ல், ‘பேஸிவ் ஸ்மோக்கிங்’ உண்டாக்கும் ஆபத்துக்கள் அனைத்தும் அறியப்பட்டன.

வீட்டில் அல்லது பொது இடங்களில் ஒருவர் சிகரெட் புகைத்தால், அதிலிருந்து வெளியாகும் 4000 ரசாயனப் பொருட்களை, சுற்றிலும் இருக்கும் ‘பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’ சுவாசிக்க நேர்கிறது. அவற்றுள் 69 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. ஒருவர் புகை பிடிக்கும்போது, அவர் உள்ளே இழுக்கும் புகையைவிட (stream smoke), வெளியே விடும் புகை (Side stream smoke) அதிகம். இரண்டு புகையிலுமே, நிகோட்டின், காட்டினின், தையோசயனைட்ஸ், பென்சீன் கூட்டுப்பொருட்கள் போன்ற புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்கள் உள்ளன.

ஒரே வீட்டில் வசிக்கும், புகை பிடிப்பவருக்கும், புகை பிடிக்காதவருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் ஒரே அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையின் உச்சம்!

புகைப்பவரின் அருகே, புகை உண்டாகும்போது கூடவே இருப்பவர்களை ‘இரண்டாம் நிலை புகைபிடிப்பவர்’ (2nd hand smoker) என்போம். அந்தப் புகை கலைந்துபோன பின்னும், அந்தச் சுற்றுச்சூழலில் புகையின் துகள்கள் சுற்றியிருக்கும் காற்று மண்டலத்தில் கலந்திருக்கும். அந்தக் காற்றைச் சுவாசிப்பவர்களை ‘மூன்றாம் நிலை புகைபிடிப்பவர்’ (3rd hand smoker) என்று சொல்வோம். இந்த இரு வகையினருக்குமே (நேரடியாக சிகரெட்டைத் தொடாதவர்கள்) புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் உண்டு. அதேபோல், இதய அடைப்பு நோய்கள், ஆன்ஜைனா போன்றவை வரும் வாய்ப்பும் 30 சதவிகிதம் உண்டு.

இவர்களுக்கு, நுரையீரல் புற்றுநோய் மட்டுமின்றி மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய்களுக்கான அபாயம் அதிகம்.

இதைவிடக் கொடுமை… வீட்டில் கர்ப்பிணிப் பெண் இருந்தால், அவருக்குக் குறைப் பிரசவம் ஏற்படலாம். கரு கலையவும் வாய்ப்பு உண்டு. புகைக்கும் சூழலில் இருக்கும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி, சிந்திக்கும் திறன், ஐ.க்யூ  குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு மிக அதிகம். சொல்லப்போனால், கருவில் குழந்தையின் வளர்ச்சியே சுருங்கிவிடும். குழந்தையின் அப்பா, தொடர்ந்து புகைபிடிப்பவர் என்றால், அந்தக் குழந்தைக்கு ஆஸ்துமா, நிமோனியா மற்றும் பிராங்காய்ட்டீஸ் (சுவாசக்குழாய் சுருக்க நோய்) வருவதற்கும், மற்ற குழந்தைகளைவிட 15 – 20 சதவிகிதம் வாய்ப்பு அதிகம்.  

வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும்கூட ஆபத்து நேர்வதைப் புகைபிடிக்கும் ஆண்கள் உணரவேண்டும். பொது இடம், கழிப்பறை, வீட்டின் வெளியே என எங்குமே புகைபிடிக்கக் கூடாது.

குடும்ப நலனில் அக்கறையும், சுற்றுசூழலில் ஆர்வமும் குறிப்பாக மனித நேயம் உள்ளவர்களாகவும் இருப்பவர்களால் மட்டுமே புகைப்பழக்கத்தை உடனடியாக நிறுத்த முடியும்” என்கிறார் டாக்டர் எழிலன்.

சிந்தியுங்கள் சகோதரர்களே… இழுத்துவிடும் புகையை இனியாவது நிறுத்துங்கள்!

பொது இடங்களில் புகைக்குத் தடை… நோய்க்கு விடை!

‘பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’-க்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேலைநாடுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  புகை பிடிப்பவரது குடும்பத்தினரின் முடி, தோல், சுவாசக்குழாய், மூக்கு நுழைவுக்குழாய் போன்ற உறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. அந்த ஆய்வின் முடிவில்தான், நச்சுக்களின் படிமானம் அந்த உறுப்புகளில் படிந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதன் பிறகு, புகையை சுவாசிப்பவர்களுக்கு ஏற்படும் கேடுகளை மனதில் கொண்டு, பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடை உத்தரவு உலகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வந்ததும், மேலைநாடுகளில் தடை செய்த இடங்களில் எல்லாம் சுற்றுச்சூழலில் இருந்தவர்களிடம் மாதிரி எடுத்து ஆராய்ந்தபோது, அங்கெல்லாம் பிரசவ பாதிப்புகள், புற்றுநோய், நிமோனியா, இதய நோய் போன்றவற்றின் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருந்தது.

Leave a Reply