shadow

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்கள் விவரம்: இணையதளத்தில் பதிய முடியாமல் தலைமை ஆசிரியர்கள் திணறல்

1பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய முடியாமல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இதற்காக கல்வித்துறை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
2017 மார்ச், ஏப்ரலில் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் (நாமினல் ரோல்) சென்ற ஆண்டு போலவே உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே தயார் செய்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் எமிஸ் இணையதளத்தில் மாணவர்களின் பெயர், தந்தை பெயர், ஜாதி, பாலினம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நெம்பர், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட 15 வகையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தின் அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குநர் தலைமையில் கடந்த திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் பெயர் பட்டியல் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவுசெய்தல் தொடர்பான அறிவுரைகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி இப்பணிக்கு 23ஆம் தேதி (புதன்கிழமை) கடைசி நாள் என மாவட்ட கல்வித்துறை கூறியிருந்தது. இதில் எமிஸ் இணையதள சேவை சர்வர் பழுதால் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இப்பணிகள் 40 சதவீதம் கூட முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனால் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கல்வித்துறை உத்தரவின் பேரில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பெயர் பட்டியல் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே தயார் செய்துவிட்டோம். இந்நிலையில் திங்கள்கிழமை புதிதாக எமிஸ் இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் மறுபடியும் பதிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு கால அவகாசம் வேண்டும்.
ஏற்கெனவே ஒருசில பள்ளிகளில் இதுவரை கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தலைமை ஆசிரியர்கள் நகரங்களில் இருக்கும் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று மாணவர்கள் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்தும், பதிவிறக்கம் செய்கின்றனர்.
மேலும் குக்கிராமங்களில் இருக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இன்டர்நெட் வசதிகள் இல்லாமல் நகரங்களைத் தேடிச் சென்று இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். தற்போது எல்லா பள்ளிகளிலும் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய முயல்வதால் கடந்த 3 நாள்களாக சர்வர் டவுன் ஆனது. இதனால் மாணவர்கள் விவரங்களை எங்களால் பதிவு செய்ய முடியவில்லை. எனவே இதற்கு கால அவகாசம் கொடுக்க கல்வித்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
எனவே அனைத்துப் பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் இணையதள சேவைகளை அரசே இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே அரசின் நலத் திட்டங்களை இணைய தளத்தில் பதிவு செய்து குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியும்.

Leave a Reply