பாலைவனத்தில் மழை பெய்யுமா?
கொஞ்ச நாள் மழை பெய்யாவிட்டாலே, நாம் வசிக்கும் பகுதி பாலைவனம் ஆகிவிடுமோ என்று பலரும் பயப்படுவார்கள். எப்போதும் மணலால் நிரம்பிக்கிடக்கும் பாலைவனத்தில் மழை பெய்யுமா என்ற சந்தேகம் நமக்கு நிச்சயம் எழும்.
பாலைவனத்தில் எப்போதுமே அதிக அளவில் வெப்பம் நிலவும். இருந்தாலும் பாலைவனப் பகுதிகளிலும்கூட, எப்போதாவது மழை பெய்யும். உலகிலேயே மிகப் பெரிய பாலைவனமான சஹாராவில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்வதாகக் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5 முதல் 10 அங்குலம் அளவுக்கு மழை பெய்கிறதாம். ஆனால், சஹாரா பாலைவனம் முழுவதும் இப்படி மழை பெய்வதில்லை. குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில்தான் மழை பெய்கிறது. பாலைவனத்தின் இன்னொரு பகுதியில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள்கூட, ஒரு துளி மழைகூடப் பெய்யாமலும் இருக்குமாம்.
உண்மையில், உலகிலேயே மிகவும் உலர்வான பகுதி சஹாரா அல்ல. தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டின் அடகாமா பாலைவனம் அமைந்துள்ள அரிகா நகரமே மிகவும் உலர்வான பகுதி. அங்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக குறைவாகவே மழை பெய்கிறது. 1931-ம் ஆண்டு முதல் 1960-ம் ஆண்டு வரை, தொடர்ந்து 29 ஆண்டுகள் அரிகாவில் மழை துளிகூட விழவில்லையாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.