பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை: இந்தியாவில் தஞ்சம் என இம்ரான் கட்சி பிரமுகர் அறிவிப்பு

பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களூக்கு மட்டுமின்றி, இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை என்றும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் இந்தியா அரசியல் தஞ்சம் தரவேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் கட்சியான தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியின் பரிகோட் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் பல்தேவ் குமார் என்பவர். சீக்கியரான இவர், கடந்த 12 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவுக்கு வந்தார். மூன்று மாத விசாவில் வந்துள்ள அவர், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் இந்தியா, அரசியல் தஞ்சம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறியபோது, ‘பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை. பாகிஸ்தானில் கடும் சிரமங்களுக்கு இடையில் வசித்துவருகிறோம். எனவே இனி பாகிஸ்தான் திரும்ப மாட்டேன். இந்திய அரசு, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடைக்கலம் தரவேண்டும் என்று கூறினார். இந்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply