shadow

பழைய வீடு வாங்குவது நல்லதா?

houseவீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் செய்து பார் என்ற பழமொழி இப்போது மலையேறிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட செலவில் கல்யாணத்தைக்கூட நடத்தி முடித்துவிடலாம். ஆனால், குறிப்பிட்ட செலவில் வீடு கட்டுவது அல்லது வாங்குவது என்பது நடக்கவே நடக்காத காணல் நீர்தான். வீடு கட்ட அல்லது வாங்க ஒரு பட்ஜெட் போட்டால், வீட்டுக்கு கிரஹபிரவேசம் செய்து போகும்போது பட்ஜெட் வேறுவிதமாக முடிந்திருக்கும். எனவே இப்போது பலரும் புதிய வீடு கட்டுவதற்குப் பதிலாகப் பழைய வீட்டை வாங்க ஆர்வம் காட்டும் போக்குக் காணப்படுகிறது. புதிய வீடு கட்டுவது அல்லது வாங்குவதைக் காட்டிலும் பழைய வீட்டை வாங்குவது பல விதத்திலும் நல்லது. குறிப்பாகப் பழைய அடுக்குமாடி வீட்டை வாங்கினால் காசு மிச்சம் செய்ய வழியும் இருக்கிறது.

மாறும் மதிப்பீடு

பழைய வீடு வாங்குவதன் மூலம் காசு எப்படி மிச்சமாகும்? ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு புதிய வீடு விற்பனை செய்வது போல பழைய வீட்டை விற்பனை செய்ய முடியாது. அப்படி ஒப்பிட்டும் விற்க முடியாது. உதாரணமாக சென்னை அடையாறில் ஒரு புதிய அடுக்குமாடி வீடு 75 லட்சம் ரூபாய் என்றால், பழைய வீட்டை அதே விலைக்கு விற்க முடியாது. பழைய வீடுகளை வாங்கும்போது பல்வேறு விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். பல்வேறு விஷயங்களை ஆராய்ந்த பிறகுதான் ஒரு பழைய அடுக்குமாடி வீட்டின் விலையை மதிப்பீடு செய்ய முடியும். அடுக்குமாடி வீடு அமைந்துள்ள இடம், கட்டிடத்தின் வயது, கட்டிடத்தின் வலிமை, பராமரிப்பு, வீட்டை எந்தக் கட்டுமான நிறுவனம் கட்டியது ஆகிய காரணிகள் ஆராயப்படும். இதன் பிறகுதான் பழைய அடுக்குமாடி வீட்டுக்கு விலையை நிர்ணயிப்பார்கள்.

குறையும் விலை

‘செகண்ட் சேல்’ எனப்படும் பொருட்களை இரண்டாம் விற்பனை செய்யும்போது தேய்மானம் எப்படிக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு விலை குறைவாகக் கிடைக்கிறதோ அதுபோலத்தான் இதுவும். பொதுவாகப் புதிய அடுக்குமாடி வீட்டைக் காட்டிலும் பழைய அடுக்குமாடி வீட்டின் விலை 15 முதல் 40 சதவீதம் குறைவாகக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அடுக்குமாடி வீடு கொஞ்சம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் 15 முதல் 20 சதவீதம் விலை குறைவாக இருக்கும் வீடுகளை வாங்குவது நல்லது. இதற்கும் குறைவான விலையில் அடுக்குமாடி வீடு வாங்கும்போது வீட்டில் கொஞ்சம் செலவு வைக்கவும் வாய்ப்புகள் இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதெல்லாம் சரி? பழைய அடுக்குமாடி வீட்டின் வயதை வைத்து புதிய அடுக்குமாடி வீட்டின் விலையைவிட எவ்வளவு விலை குறைவாகக் கிடைக்கும்? வீடு கட்டி 5 ஆண்டுகள் ஆகி விட்டது என்றால் 15 முதல் 20 சதவீதம் குறைவாகக் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. 5 முதல் 10 ஆண்டுகள் என்றால் 20 முதல் 25 சதவீதம் வரையும், 10 முதல் 15 ஆண்டுகள் என்றால் 25 முதல் 30 சதவீதம் வரையும், 15 முதல் 20 ஆண்டுகள் வரை என்றால் 40 முதல் 45 சதவீதம் வரையும் அடுக்குமாடி வீட்டின் விலை குறைவாகக் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

எழும் சிக்கல்கள்

இப்படிக் குறைவாகக் கிடைப்பதாலேயே வீடுகள் வாங்க உத்தேசிப்பவர்கள் பழைய வீடு கிடைக்குமா என்று தேடி அலைகி றார்கள். பழைய வீடு வாங்குவதில் காசு ஓரளவுக்கு மிச்சம் ஆவது போல சில சிக்கல்களும்கூட இருக்கின்றன. அதையும் நிச்சயம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். பழைய வீடுகளின் தேய்மானத்துக்கு தகுந்தாற்போல வீடுகள் பலவீனமாக இருக்கலாம். அதைச் சரி செய்ய கை வைத்தால், புதிய வீடே வாங்கியிருக்கலாமே என்று எண்ண வைத்துவிடும். எலெக்ட்ரிக் பொருட்கள், குழாய்கள், கழிவறை எனப் பலவும் பழுதடைந்து காணப்படும். இவையெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை என்று நினைப்பவர்களுக்குப் பழைய வீடு வாங்குவது நல்ல பலனைக் கொடுக்கும்.

பத்திரம், பத்திரம்

பழைய வீடு வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், முதலில் வீட்டில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். வில்லங்கம் இல்லை என்றால், தாய்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சட்ட ஆலோசனை பெறுவது நல்லது. டூப்ளிகேட் பத்திரம் கொடுத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் சிலர் வங்கியில் அல்லது தனிநபர்களிடம் வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்துவிட்டு பணம் வாங்கியிருப்பார்கள். ஆனால் பத்திரம் தொலைந்துவிட்டது என்று போலீசில் புகார் செய்து, பத்திரப்பதிவு அலுவலகத்தில் டூப்ளிகேட் பத்திரம் வாங்கி ஏமாற்றவும் வாய்ப்பு இருக்கிறது. வீட்டை வாங்குவதற்கு முன்பு வீட்டுவரி, தண்ணீர் வரியைப் பாக்கியில்லாமல் கட்டியிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த இணைப்புகளை உங்கள் பெயரில் மாற்றிக் கொள்ள பணம் கொடுக்கும்போதே அந்தப் பணிகளையும் செய்துவிட வேண்டும்.

மாறும் கட்டணம்

அதேசமயம் பழைய வீடுகளில் குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை இருக்கும் என்பதால் அவற்றை பெற தனியாக அலைய வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கான செலவும் மிச்சம்தான். புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது பிரிக்கப்படாத மனைக்கு (அன் டிவைடட் ஷேர் – யு.டி.எஸ்.) பதிய முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்துக்குச் செலவாகும். பழைய வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனைக்குப் பதிவு தேவைப்படாது. இதைத் தவிர்த்து வீட்டின் தேய்மானம் தவிர்த்து அதன் மதிப்புக்கு முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

தனி வீட்டுக்கு என்ன மதிப்பு?

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். தனி வீடு கிடைக்கும்போது விலை குறைவாக வாங்க கிடைக்குமா?தனி வீட்டைப் பொறுத்தவரை அது அமைந்திருக்கும் மனையின் சந்தை விலை முக்கியமாகப் பார்க்கப்படும். இதோடு கட்டிடத்தின் மதிப்பைச் சேர்த்தால் தனி வீட்டின் மொத்த மதிப்பும் கிடைக்கும். ஆனால், இதில் மனை முக்கியம் இடம் பிடிக்கும் என்பதால் மனையைப் பொறுத்து விலை கூடுதலாக இருக்கவும் வாய்ப்பு உண்டு என்கிறார் நீண்ட நாட்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சென்னையைச் சேர்ந்த ராஜசேகர்.

Leave a Reply