shadow

பழைய வீடுகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக நடந்துவருகிறது. 2000-ன் தொடக்க காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை வளரத் தொடங்கியது. அந்த நேரத்தில் முதலீடுசெய்த தொகை ஐந்தாறு வருடத்துக்குள் இரட்டிப்பானது. உதாரணமாக, சூளைமேடு பகுதியில் ரூ. 5 லட்சம் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் விலை இன்றைக்கு நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவுக்குப் பத்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

ஆனால், கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வீட்டு விலை அதன் உச்சத்தில் அப்படியே நின்றுவிட்டது. அதே நேரம் வீழ்ச்சியடையவில்லை. பத்து மடங்காக உயர்ந்த தொகை அதற்கு மேல் ஏறவில்லை. அதற்குக் கீழும் இறங்கவில்லை. ஐடி துறையைக் குறிவைத்து ஓ.எம்.ஆர். சாலைப் பகுதியில் விரைவாக வளர்ந்த தென் சென்னை ரியல் எஸ்டேட்டும் இப்போது வீழ்ச்சியடைந்திருக்கிறது. அந்தப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பல வீடுகள் இன்னும் விற்கப்படாமல் இருக்கின்றன. ஆனால், விலையைக் குறைக்கவும் கட்டுநர்கள் தயாராக இல்லை.

இந்தக் கட்டத்தில் புதிய ரியல் எஸ்டேட் மையங்களாகப் பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி போன்ற மேற்குச் சென்னைப் பகுதிகளும் ஊரப்பாக்கம், பொத்தேரி, கூடுவாஞ்சேரி போன்ற தென் சென்னைப் பகுதிகளும் உருவாகிவருகின்றன. இந்தப் பகுதிகளில் நடுத்தர மக்கள் வாங்குவதற்கு ஏற்ற விலையில் வீடுகள் கிடைக்கின்றன. ஆனால், இந்தப் பகுதி நகரத்திலிருந்து தொலைவில் இருப்பதால் நகரத்துக்குள் வேலை பார்க்கும் மக்களுக்கு இங்கு வந்துபோவது சிரமம். அதே நேரம் அந்தப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு இது சாதகமாகவும் இருக்கும்.

இந்த இடத்தில்தான் நகரத்துக்குள் இருக்கும் பழைய வீடுகளை வாங்கும் ஆர்வம் நடுத்தர மக்கள் மத்தியில் உருவாகிவருகிறது. மேலும் நகருக்கு வெளியே தொலைவில் வாங்கும் வீட்டின் விலையிலேயே பழைய வீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, கூடுவாஞ்சேரிப் பகுதியில் ரூ. 25 லட்சம் முதல் இரு படுக்கையறை வீடுகள் கிடைக்கின்றன. அதைவிடக் கூடுதலாக இரண்டு மூன்று லட்சங்கள் செலவழித்தால் குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் இரு படுக்கையறை வசதி கொண்ட பழைய வீட்டை வாங்க முடியும்.

பழைய வீட்டை மதிப்பிடுவது எப்படி?

அந்த வீடு அமைந்துள்ள பகுதி, கட்டிடத்தின் ஆயுள், பராமரிப்பு, கட்டிய நிறுவனத்தின் தரம் இவையெல்லாம் பழைய வீட்டை மதிப்பிடுவதில் முக்கியமான அம்சங்கள். இவை எல்லாம் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் வீட்டை வாங்கப் பரிசீலிக்கலாம். பொதுவாக, அந்தப் பகுதியின் சந்தை மதிப்பிலிருந்து 20 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை கட்டிடத்தின் ஆயுளைப் பொறுத்து வீட்டைக் குறைத்து வாங்க வாய்ப்புள்ளது. வீடு கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்தால் மதிப்பு இதைவிடவும் குறைவாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அப்படியான வீடுகளை வாங்கும்போது கவனித்து வாங்க வேண்டும். வீடு பழுதடைந்திருக்கலாம். வீட்டைச் சரிசெய்ய அதிகம் செலவிட வேண்டியிருக்கும். மேலும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வீடுகளுக்கு வங்கிகள் பெரும்பாலும் கடன் தர முன்வருவதில்லை.

வீட்டின் தாய்ப் பத்திரத்தை வாங்கிப் பார்க்க வேண்டும். இந்த வீட்டின் அடமானக் கடன் ஏதும் உள்ளதா என்பதை அசல் பத்திரம் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். தண்ணீர்க் கட்டணம், வீட்டு வரி ஒழுங்காகக் கட்டப்பட்டுள்ளதா, என்பதையும் சரிபார்க்க வேண்டும். இவையெல்லாம் பழைய வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பழைய வீட்டுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

பழைய வீட்டுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. ஆனால், அதற்கு முன் வாங்கவிருக்கும் அந்தப் பழைய வீட்டை வங்கி சார்பில் மதிப்பீட்டாளர்கள், அதன் வயது, அதன் தாங்கு திறன் போன்றவற்றை ஆய்வுசெய்து அறிக்கைகள் அளிப்பார்கள். அதன் அடிப்படையில்தான் வீட்டுக்குக் கடன் வழங்கப்படும். அந்த வீடு 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாக இருந்தாலோ பலவீனமாக இருந்தாலோ கடன் கிடைப்பது சிரமம். கிடைக்கும் பட்சத்தில் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply