shadow

பளு தூக்கினால் பலம் பெறலாம்!

அதிக எடை கொண்ட பொருளை நகர்த்தவோ தூக்கவோ வேண்டும் என்றால் சிறியவனாக இருந்தாலும் ஓர் ஆண் பிள்ளையைத்தான் கூப்பிடுகிறோம். காரணம் பெண்களால் அதிக எடையைத் தூக்க முடியாது என்ற எண்ணம்தான். பெண்களைப் பலவீனமானவர்களாகச் சித்தரிக்கும் இதுபோன்ற கற்பிதங்களை உடைத்து வருகிறார்கள் இன்றைய பெண்கள்.

ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் முதன்முறையாக நாட்டுக்குப் பதக்கம் வென்று தந்தார் கர்ணம் மல்லேஸ்வரி. அவருக்குப் பிறகு பளு தூக்கும் பிரிவில் பெண் வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குப் பதிலாகக் குறைந்துகொண்டுதான்வருகிறது. இந்த இடைவெளியைக் குறைத்து, பெண் பளு தூக்கும் வீராங்கனைகளை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் பயிற்சியாளர் சாந்தி.

“பள்ளியில் படிக்கும்போது தடகளப் போட்டிகளில்தான் கலந்துகொள்வேன். எனக்கு எந்த மாதிரி விளையாட்டை விளை யாட முடியும் என்பதைக் கண்டறிந்து, வழிகாட்ட அப்போது யாரும் இல்லை. என் அப்பாதான் பளு தூக்கும் வீராங்கனையாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக இந்திய விமானப்படைப் பிரிவில் இருந்து ஓய்வு பெற்ற பயிற்சியாளர் ரவிச்சந்திரனை அறிமுகம் செய்து வைத்தார். என் பயிற்சியாளர் கொடுத்த ஊக்கமும் சரியான வழிகாட்டுதலும் என்னைக் குறுகிய காலத்திலேயே தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் முதல் பரிசு பெற வைத்தன!” என்கிறார் சாந்தி.

கல்லூரி நாட்களில் மாநில, தேசியப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களைப் பெற்றிருக்கிறார் சாந்தி. பளு தூக்கும் பிரிவில் தன்னைப் போலப் பல பெண்கள் வர வேண்டும் என்பதற்காக இளங்களை உடற்கல்வியியல், முதுகலை உடற்கல்வியியல் படித்தார். பிறகு பட்டியாலாவில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் அகாடமியில் சேர்ந்து பளு தூக்கும் பயிற்சியாளர் படிப்பை முடித்தார். சொந்த ஊரான கோவில்பட்டியில் தனியார் பள்ளியில் சில காலம் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பளு தூக்கும் பயிற்சியாளர் பணியைக் கடந்த ஓர் ஆண்டாகச் செய்துவருகிறார். சென்னை நேரு விளையாட்டு அரங்கத் தில் பெண்களே அதிக எண்ணிக்கையில் இவரிடம் பயிற்சி எடுத்துவருகின்றனர்.

“பொதுவாகப் பெண்கள் அதிக எடையைத் தூக்கினால் அவர்களின் கர்ப்பப் பை இறங்கி விடும் என்ற கருத்து உள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை. நானே 50 கிலோ எடை வரை பளு தூக்கும் போட்டிகளில் தூக்கியிருக்கிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கி றேன். எடை தூக்குவதால் உடலுக்கு அதிக ஆற்றல்தான் கிடைக்குமே தவிர, எந்தப் பிரச்சினையும் வராது” என்று தன்னையே உதாரணமாக்கி விளக்குகிறார் சாந்தி.

பளு தூக்கும் விளையாட்டைப் பொறுத்தவரை உடலும் மனமும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு வீரரால் சாதிக்க முடியும். போட்டியின்போது ஏற்படும் சிறு தடுமாற்றமும் உடல் அளவில் பெரிய பிரச்சினையை உருவாக்கிவிடக்கூடும். பளு தூக்கும் வீரர்கள் பலருக்கு நல்ல திறமை இருந்தும் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவையான உபகரணங்கள் வாங்குவதில் சிரமம் உள்ளது. இதுபோன்ற உதவிகளைச் செய்ய நிறைய விளம்பரதாரர்கள் தேவைப்படுகிறார்கள். இத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் தன்னிடம் பயிற்சி பெறும் வீரர்களை ஆசிய அளவில் சாதிக்க வைக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார் சாந்தி.

Leave a Reply