shadow

பக்தர்களுக்காக பரிந்துரைக்கும் ஆண்டாள் கிளி!

aandal
நள வருடம் – ஆடி மாதம், சுக்ல பட்சம் சதுர்த்தி – செவ்வாய்க் கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய அந்தத் திருநாள், பெரும் புண்ணியம் கட்டிக்கொண்டது. அந்த தினத்தில்தான்… ஸ்ரீவில்லிப்புத்தூரில், வட பெருங்கோயிலுடையான் கைங்கரியத்துக்காக பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்தில், துளசிச் செடியின் கீழ், செந்தமிழையும், பைந்நாகப் பாம்பின் மீது பள்ளிகொண்டானையும் ஆள… ஸ்ரீபூமிப் பிராட்டியின் அம்சமாய் அவதரித்தாள் ஸ்ரீஆண்டாள்!

‘அரங்கனையே மணப்பேன்’ எனச் சங்கல்பித்ததுடன், தான் நினைத்ததை நிறைவேற்றியும் காட்டியவள் அல்லவா, அந்தச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்! அவள் உதித்த ஆடிப்பூரத்தில்  அவளின் திருப்பாதம் பணிந்து வணங்க, நாம் நினைத்த காரியங்களையும், தடங்கலின்றி நிறைவேற்றித் தருவாள் ஆண்டாள்.

நாமும் வரும் ஆடிப்பூரத் திருநாளை (ஆகஸ்ட்- 5) போற்றும் வகையில், ஆண்டாள் குறித்த மகிமைமிகு தகவல்களை அறிந்து கொள்வோமா?

 ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆடிப்பூரம்

பெரியபெருமாள், பெரியாழ்வார், பெரிய கோபுரம், பெரிய தேர்… என பெரும் சிறப்புகள் கொண்ட ஸ்ரீவில்லிப்புத்தூரில், ஆண்டாளின் அவதார உற்ஸவம் – தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெறும். கோயிலின் பெரிய கோபுரத்துக்கு முக்கால் பங்கு அளவில் பிரமாண்ட உருவத்துடன் திகழும் இந்தத் தேர், தமிழகத்தின் 3-வது பெரிய தேர் என்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருவுருவங்கள், ராமாயண- மகாபாரதக் காட்சிகளுடன் திகழும் இந்தத் தேரினை இழுக்க மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தேவை. தேர்த் திருவிழாவன்று ஆண்டாளும் ஸ்ரீரங்கமன்னாரும் இதில் உலா வருவர். தேர் நிலையை அடைந்ததும், திருப்பூர மண்டபத்தில் ஸ்ரீரங்கமன்னாருக்கும் ஆண்டாளுக்கும் நடைபெறும் திருமஞ்சன- திருவாராதனையைக் காணக் கண்கோடி வேண்டும்!

 ஆண்டாள் மாலை!

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் சூடிய மாலைக்கு, இன்றைக்கும் மகத்துவம் உண்டு. திருப்பதியில் வேங்கடவன் திருக்கல்யாணத்தின்போதும், திருமாலிருஞ் சோலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்பும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்துஸ்ரீஆண்டாள் சூடிய மாலை அந்தத் தலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அந்தந்தத் தலத்தின் பெருமாள்கள் சூடிக்கொண்ட பிறகே, விழா தொடருமாம்.

 ஆண்டாள் கிளி

தயை சிந்தும் விழிகளும், தெய்விகத் தோற்றமும், நாவில் விளையாடும் நல்லிசைத் தமிழும், சாய்ந்த கொண்டையும், தோள்களைத் தழுவிய மாலையும், தொண்டருக்கருளும் கருணையும்… என ஆண்டாளின் அழகைச் சொல்லிக்கொண்டே போகலாம். இவை எல்லாவற்றையும்விட, ஆண்டாளின் தோளில் ஒயிலாகத் தொற்றியபடி காட்சிதரும் கிளி பேரழகு!

இந்தக் கிளியை, தினசரி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின்போது சார்த்துவது வழக்கம். அந்தக் கிளி, இரவு அர்த்தசாமப் பூஜை வரை ஆண்டாளின் தோளில் வீற்றிருக்கும். அதன் பிறகு, ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மாலை முதலானவற்றை அகற்றும் ‘படி களைதல்’ எனும் நிகழ்வின்போது, கிளியும் அகற்றப்படும்.
முதல் நாள் மாலையில் சார்த்தப்பட்டுக் களையப்பட்ட கிளி, மறுநாள் உபயதாரர் அல்லது கோயிலுக்கு வரும் முக்கியப் பிரமுகர்களுக்குப் பிரசாதத்துடன் வைத்துக் கொடுக்கப்படுகிறது.

இந்தக் கோயிலில், இலைகளையும் பூக்களையும் வைத்து மிக நேர்த்தியாகச் செய்யப்படும் கிளியைச் சார்த்தும் வழக்கம், 8-ம் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது. கிளி செய்வதற்கென்றே கோயில் சார்பாக ஒரு கலைஞர் நியமிக்கப்பட்டு, அவருடைய குடும்பம்தான் தொன்றுதொட்டு இந்த ஆன்மிகப் பணியைச் செய்து வருகிறது. இப்போது, அந்தக் குடும்பத்தின் வாரிசான ராமர் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக, ஆண்டாளுக்காகக் கிளி செய்து தருகிறார்.

ஆண்டாளின் தோளில் 3 மணி நேரம் இருப்பதால், மிகுந்த புனிதப் பொருளாகக் கருதப்படுகிறது இந்தக் கிளி. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆண்டாளிடம் வைக்கும் கோரிக்கைகளை கிளி மூலமாகத்தான் பெருமாளிடம் தாயார் சொல்வதாக இங்கே ஐதீகம்.

ஸ்ரீரங்கனாக ஆண்டாள்…

சென்னை- மயிலாப்பூரில் ஸ்ரீமாதவபெருமாள் ஆலயத்தில், ஆடிப்பூரத்தன்று ஆண்டாளுக்கு அரங்கன் அலங்காரம் செய்வார்கள். ஸ்ரீஅரங்கனாகக் காட்சித் தரும் ஆண்டாளை தரிசிப்பது சிறப்பு!

Leave a Reply