நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் அவருக்கு உதவிய அடையாளம் தெரியாத நபர் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இபிகோ 419, 420, 120-பி ஆகிய பிரிவுகளின் கீழ் தேனி க.விலக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நீட் தேர்வு எழுதி தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் ஒருவர் குறித்து எனக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்னஞ்சல் மூலம் ஒரு புகார் வந்தது.
அந்தப் புகாரில் நீட் தேர்வு எழுதிய மாணவர் வேறு, கல்லூரியில் சேர்ந்த மாணவர் வேறு என்று கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் ஆள்மாறாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக உடனே போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டதோடு, மாநில சுகாதாரத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.