shadow

நிறைவேறுமா வீட்டுத் தேவை?

home_loan_2570436fநகரங்களில் திரும்பிய இடங்களிலெல்லாம் வானுயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் காணலாம். தேவையான வீடுகளைவிட அதிகமாக வீடுகள் இருப்பதைப் போன்ற எண்ணம் எழலாம். ஆனால் உண்மை அப்படியல்ல. இன்னும் வீடுகள் விஷயத்தில் போதாமையே நிலவுகிறது என்கிறார் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு. சுமார் இரண்டு கோடி வீடுகள் பற்றாக்குறையாக உள்ளது என்கிறார் அவர்.

அதெப்படி என ஆச்சரியமாக உள்ளதா? அவர் கூறுவது உண்மைதான். பற்றாக்குறை நிலவுவது பணம் படைத்தோர் பகுதிகளில் அல்ல. எளியவர்களே இடமின்றித் தவிக்கிறார்கள். இந்தப் பற்றாக்குறையைப் போக்கும் நோக்கத்தில்தான் மத்திய அரசு 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தைத் தீட்டி அதை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

பொருளாதாரரீதியாகப் பின் தங்கியிருப்பவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் வசிக்கும் இடங்களிலுமே இந்தப் பற்றாக்குறை உள்ளது என்கிறார் மத்திய அமைச்சர். அவர் குறிப்பிடும் இந்த இரண்டு கோடி வீடுகளில் சுமார் 95% பற்றாக்குறை இந்தப் பகுதிகளில்தான் உள்ளது என்கிறார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுப்பது நகரமயமாக்கம் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நகரமயமாதல் தொடர்பான திட்டமிடல் இன்னும் முறையாக மேற்கொள்ளப்படவே இல்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசு நகர்ப்புற வளர்ச்சிகளுக்காக எத்தனையோ திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறது.

இந்தியாவில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமும் நகரங்களைப் புதுப்பிக்கும் திட்டமும் (அடல் மிஷன் ஃபார் ரிஜுவெனேஷன் அண்ட் டிரான்ஸ்பார்மேஷன்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நூறு நகரங்கள் உருவாக்கப்படுவதைப் போல அடல் பிஹாரியின் பெயரில் செயல்படுத்தப்படும் நகரங்களைப் புனரமைக்கும் திட்டத்தில் (Atal Mission for Rejuvenation and Urban Transformation) ஒரு லட்சம் பேருக்கு மேல் மக்கள்தொகை கொண்ட 500 நகரங்களில் வலுவான உள்கட்டமைப்பு மேற்கொள்ளப்படும்.

2022-க்குள் அனைவருக்கும் கான்கிரீட் வீடு என்னும் திட்டம் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது என்றும் வீடுகளை அமைப்பதற்கு மாநில அரசுகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இந்தத் திட்டத்தில் நகரப் பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளை மறு கட்டுமானம் செய்வதே பிரதானமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கும் அரசு நகரப் பகுதியில் வசிக்கும் எளியோருக்கு வீடு கிடைப்பதற்காக வீட்டு வசதிக் கடனின் வட்டி விகிதத்துக்கு மானியம் அளிக்க முன்வந்துள்ளது.

இந்த மானியத்துக்கு மத்திய அமைச்சரவை தந்திருக்கும் ஒப்புதல் காரணமாக வழக்கமான 10.5 % வட்டி விகிதக் கடன் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியுள்ளவர்களுக்கும் 6.5% வட்டிக்குக் கிடைக்கும்.

இதனால் சுமார் ஆறு லட்ச ரூபாய் கடனை மாதத்துக்கு ரூ.6,632 என்னும் அளவில் 15 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டிய ஒருவர் மாதத்துக்கு ரூ.4,050 செலுத்தினால் போதும். இதனால் அவர் மாதம் 2.052 ரூபாய் குறைவாகச் செலுத்தினால் போதும். இந்த விவரத்தை நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

இந்த மானியம் அளிப்பதால் ஒரு பயனாளிக்கு ஒரு லட்ச ரூபாயிலிருந்து 2.3 லட்ச ரூபாய் வரை அரசுக்குச் செலவாகிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் சுமார் இரண்டு கோடி வீடுகள் உருவாக்கப்பட்டு வீடுகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் எனத் தகவல்கள் வந்துள்ளன.

ஆகவே நகர்ப்புறப் பகுதியில் புதிய வீடுகளை உருவாக்க வேண்டியதிருப்பதால் அது ரியல் எஸ்டேட் துறைக்கும் அனுகூலமாக அமையும் என அத்துறையினர் நம்புகின்றனர்.

Leave a Reply