நாளை கனமழைக்கு வாய்ப்பில்லை: ரெட் அலர்ட் வாபஸ்
தமிழகத்தில் அக்டோபர் 7ஆம் தேதி அதாவது நாளை கனமழை பெய்யும் என ரெட் அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறி வரும் 7-ம் தேதி தமிழகத்தின் பெரும்பான்மையான குதிகளில் அதிதீவிர கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதையடுத்து தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போதைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நேற்று உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் இருக்கிறது. எனவே, நாளை அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை. எனவே, தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்ப பெறப்படுகிறது.
எனினும், இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் 8-ம் தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு இன்று முதல் 8-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.