shadow

நாக வழிபாடு எப்படி தோன்றியது தெரியுமா?

நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன் பின்னர் ஆவி வழிபாட்டை மேற்கொண்டான். பின்னர் தனக்கு நல்வாழ்வு தரும் சக்திகளை மனிதன் பல்வேறு உருவங்களில் கண்டு அவற்றிற்குக் கோவில் எழுப்பி வழிபட்டான்.

இது தொடர்பான சம்பவங்கள் தான் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் மலர்ந்தன. இவற்றின் அடிப்படையிலேயே பாம்பு கோவில்கள் தோன்றின.
நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர். நாகதோஷம் இருந்தால் குழந்தை பிறக்காது என்று நம்பினர். இன்றும் புற்றுக்குப் பால் வார்த்து வழிபடும் வழக்கம் உள்ளது.

முதலில் பயம் காரணமாக நாகங்களை வழிபட்டவர்கள் பின்னர் அது ஏதோ ஒரு தெய்வ சக்திக்குக் கட்டுப்பாடு நடப்பதாகவும், விதி முடிந்தவரை மட்டுமே அது கடிப்பதாகவும், நம்பினார்கள்.

நாளடைவில் அனைத்து விலங்கு வழிபாட்டு முறைகளிலும் பாம்பு வழிபாட்டிற்கு எனத் தனி முக்கியத்துவம் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை பாம்பு வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாம்பு வழிபாடு வேறு பல நாடுகளிலும் இருந்து வந்துள்ளது. பொனீசியா, மெஸபடோமியா, கிரேக்கம், இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, எகிப்து, நேபாளம் ஆகிய நாடுகளிலும் பாம்பு வழிபாடு இருந்து வருகிறது.

இந்தியாவை பொருத்த வரை இமயம் முதல் குமரி வரை பாம்பு வழிபாடு இருந்து வருகிறது. குறிப்பாகத் தென் இந்தியாவில் பாம்பு வழிபாடு அம்மன் வழிபாட்டுடன் இணைத்தே நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலும் பாம்பு வழிபாடு புகழ் பெற்றது. பாம்பின் பெயர்கள் கொண்ட இறைவனது பெயர்கள் பல உள்ளன. நாக ஆபரண விநாயகர், சர்ப்பபுரி ஈசுவரர், நாகநாதர், நாகேசுவரர், புற்றீசர், வன்மீக நாதர் போன்ற பெயர்கள் இறைவனுக்கு வழங்கப்படுகின்றன.

அதே போல் நாகத்தின் பெயர் கொண்ட தலங்கள் பல உள்ளன. நாகர்கோவில், நாகபட்டினம், நாகமலை, ஆலவாய், கோடநல்லூர், திருப்பாம்புரம், பாம்பணி, காளத்தி போன்ற பெயர்கள் பாம்பின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவை.

பாம்பின் பெயர்களோடு பொருந்தி இருக்குமாறு பெயர் வைக்கும் பழக்கமும் தமிழ் மக்களிடம் உள்ளது. நாகராஜன், நாகப்பன், நாகமணி, நாகரத்தினம், நாகபூஷணம், நாகார்ஜுனன், நாகநாதன், நாகலட்சுமி, நாகம்மை, நாகலிங்கம், நாககுமாரி, நாகநந்தினி போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கவை. கருவுற்ற பெண் நாகம் ஒன்றைப் பார்த்து விட்டால் அவள் பெற்றெடுத்த குழந்தைக்கு நாகத்தின் பெயரோடு பொருந்தி வருமாறு பெயர் வைப்பது நாட்டுப்புற வழக்கமாகும்.

பழங்காலத்தில் நாகர் என்ற இனத்தவர் இருந்தனர். இவர்களில் தீவுகளில் வாழ்ந்தனர். இவர்கள் தலையில் ஐந்து தலைநாகம் போல் அமைந்த குடைபோன்ற அமைப்பைச் சூடியிருந்தனர். கைகளிலும் நாகப்படம் பொறித்த வளையங்களை அணிந்திருந்தனர்.

கருவுற்று, மழைநீரால் நனைந்தும், இடருற்ற தவளைக்கு, படமெடுத்த நல்ல பாம்பு குடைபிடித்த புனித இடம் சிருங்கேரி. அந்தக் காட்சியைக் கண்ட ஆதிசங்கரர் அங்கே சாரதா பீடத்தை நிறுவினார். அதேபோல மதுரைக்கு எல்லை வரைந்தது மற்றொரு பாம்பு. இதனால் மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் உண்டானது.
இவ்வாறு பாம்பு வழிபாடு பழமை வாய்ந்த வழிபாடாகத் திகழ்கிறது

Leave a Reply