shadow

நம் வீட்டில் உள்ள பூஜையறை எப்படி இருக்க வேண்டும்?

மனிதர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு வழிபாடுகளை நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன. அவை: குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடு, கிராமதேவதை வழிபாடு (அருகில் உள்ள கோயிலில் குடியிருக்கும் தெய்வம்), நித்ய வழிபாடு.

இவற்றில் நித்ய வழிபாடு என்பது, அனுதின மும் நமது வீட்டில் நாம் செய்யும் பூஜையாகும்.இதன் அவசியம், நியதிகள் மற்றும் தாத்பர்யங்கள் குறித்துத் தெரிந்துகொள்வோமா?

பூஜை அறையில் விளக்கேற்றி (கடலை எண்ணெய் தவிர்த்து), நமஸ்கரித்து, தெரிந்த ஸ்லோகங்களை அல்லது துதிப்பாடல்களைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்லோகங்கள், துதிப்பாடல்கள் தெரியாதவர்கள், புத்தகத்தைப் பார்த்துப் படித்தும் வழிபடலாம்.

`தீப ஜ்யோதி நமாம்யகம்’ என்கிறது சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று. எவரது வீட்டில் அந்திச் சந்தியில் திருவிளக்கு பிரகாசிக்கிறதோ, அங்கே மகாலட்சுமி நித்யவாசம் செய்கிறாள். ஆகவே, அனுதினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது அவசியம்.

தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், இல்லத்தில் புறயிருள் நீங்குவது மட்டுமின்றி, நம் மனதில் உள்ள அறியாமை எனும் அக இருளும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள். விஞ்ஞான ரீதியாகவும் விளக்கொளி வீட்டுச்சூழலை புனிதப்படுத்தும் என்பார்கள் பெரியோர்கள்.

பூஜையறைக்குள் போகும்போது அலைபாயும் கூந்தலைத் தவிர்த்துவிடுங்கள். கூந்தலில் இருந்து நீர் சொட்டுதல் கூடாது.

அதேபோல், தலையில் துண்டு கட்டியபடி விளக்கேற்றுவதும் தவறு. முடியை நன்கு உலர்த்திப் பின்னலிட்ட பிறகு, நெற்றியில் அவரவர் வழக்கப்படி திலகம் இட்டுக்கொண்டு விளக்கேற்றுதல் வேண்டும்.

பூஜையறைக்குள் கோலமிடுவது அவசியம்.

பச்சரிசி மாவால் கோலமிடுங்கள். வாய்ப்பு இல்லாதவர்கள், கோலக்கல் அல்லது கோல மாவு வாங்கி, அவற்றால் கோலமிடலாம்.

அதேபோல், பூஜை அறையில் ஏதேனும் மலரைக்கொண்டு அலங்கரிப்பது நல்லது. ரோஜா, செம்பருத்தி, அரளி, தும்பை ஆகிய மலர்களை கடவுள் படங்களுக்குச் சமர்ப்பிக்கலாம்.

அறுகம்புல், வில்வம், துளசி, மாசிபத்ரம் ஆகிய இலைகளும் வழிபாட்டுக்கு உகந்தவை.

பூஜையறையில் சிலர் அட்சதை கொண்டு அர்ச்சிப்பார்கள். இந்த அட்சதை அரிசி முனை முறியாத அரிசியாக இருக்க வேண்டும். வீட்டில் அட்சதை இருப்பது மங்கலத்தைப் பெருக்கும்.

வழிபாட்டில் மனமுருகி கடவுளிடம் வேண்டும்போது, நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும்படி, மனதை மலர்ச்சியுடன் வைத்துக்கொள்ளுங்கள்.

வாரத்துக்கு ஒருமுறை பூஜை பாத்திரத்தைக் கழுவி, சுத்தமாக வைத்திருங்கள். எலுமிச்சை, விபூதிகொண்டு பூஜை பாத்திரங்களைத் துலக்குங்கள். விளக்கின் மேற்பகுதி மற்றும் செல்ஃப்களில் கரிபடிந்தால், காட்டன் துணியால் அழுத்தித் துடைத்தாலே போய் விடும்.

பூஜை அறையில் நைவேத்தியம் செய்யும் போது, மணியோசை அவசியம். இந்த ஓசையைக் கேட்டு இறைவன் நமது வீட்டுக்கு வருவதாக ஐதீகம். மணியைத் தரையில் வைக்கக் கூடாது. அதேபோல், பூஜையறை தீர்த்தத்தை நாள்தோறும் மாற்ற வேண்டும்.

படுக்கச்செல்லும் முன் பூஜை அறை தீபத்தைக் குளிர்விக்க மலர்களைப் பயன் படுத்தலாம். இதுதான் சரியான வழிமுறை. வாயால் ஊதியோ, கைகளால் விசிறியோ தீபச்சுடரை அணைக்கக் கூடாது.
பூஜை அறையையும் கோயிலாகப் பாவித்து வழிபட ஆரம்பித்தால், இறையருள் நமது இல்லத்தில் பரிபூரணமாக நிறைந்திருக்கும்; லட்சுமிகடாட்சம் என்றென்றும் நிலைத்திருக் கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்​.

Leave a Reply