shadow

நடிகனாக இருந்திருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன்: துரைமுருகன்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கடந்த சில நாட்களாக காமெடியாக பேசி அனைவரையும் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இன்று சட்டசபையில் பேசிய அவர், ‘நான் அரசியல்வாதியாக இல்லாமல் நடிகராக இருந்திருந்தால் எனக்கும் ஜெயலலிதாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்’ என்று கூறி சபையை கலகலப்பாக்கினார்

சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், கிராமியக் கலைகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது, அதற்கு உதாரணமாக ஒரு சில கிராமியப் பாடல்களையும் பாடினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், துரைமுருகன் நன்றாக பாடுவதாகவும்,? இதற்கு நாடகம் எதிலாவது நடித்துள்ளாரா என கேட்டார்.

அதற்குப் பதிலளித்த துரைமுருகன், சிறுவயதில் பல நாடங்களில் நடித்துள்ளதாகவும், ஷேக்ஸ்பியர் சொல்வது போல் உலகமே நாடக மேடை தான் எனவும், அதில் அனைவரும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம் எனவும் கூறினார். தொடர்ந்து, சபாநாயகரும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று அவர் கூறியதும் திமுகவினர் சிரிக்கத் தொடங்கினர்.

அவரைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நவரசங்கள் வெளிப்படும் விதமாக துரைமுருகன் அவையில் பேசுவதாக கடந்த 2001 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதாக தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த துரைமுருகன், சினிமாத் துறையில் சென்றிருந்தால் நானும் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன். சினிமாவில் நானும் சிவாஜியைப் போல பெரிய நடிகனாகி இருப்பேன் என்று கூறியதும் மொத்த அவையும் சிரிப்பலையில் மூழ்கியது.

Leave a Reply