shadow

நடராஜன் கவலைக்கிடம்: பரோலில் வருவாரா சசிகலா?

கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் தொடர்ந்து சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். 74 வயதாகும் நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, நுரையீரலும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவர்களும் சிகிச்சை அளித்து சென்று உள்ளனர்.

இந்த நிலையில் இவரது நிலைமை குறித்து மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் இளங்குமரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ”தற்போது நடராஜனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாச உதவியுடன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக நடராஜன் காத்திருக்கிறார். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் வேண்டி அரசின் உறுப்புதானம் பெறுவோர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு முன்பு பலரும் கல்லீரல் தானம் வேண்டி விண்ணப்பித்து இருப்பதால், நடராஜன் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, இருந்த நிலையை விட தற்போது முன்னேற்றம் இருந்தாலும், அவர் ஆபத்தான நிலையில் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இவருக்கு மருத்துவர் மொஹமத் ரெலா தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

Leave a Reply