3 கீமீ இழுத்து சென்றதால் பரபரப்பு

கந்தர்வகோட்டை அருகே நடந்து சென்ற நபர் மீது கார் மோதிய சம்பவத்தில், நடந்துசென்ற நபர் காருக்கு அடியில் சிக்கியது தெரியாமல் 3 கிலோ மீட்டர் தூரம் வரை அவரது உடல் காரால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சாலையின் ஓரமாக தேவதாசன் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் விபத்துக்குள்ளானவர் கீழே விழுந்து விட்டதாக நினைத்து காரை ஓட்டி வந்த நபர் வேகமாக காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்றுள்ளார்.

அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழைய கந்தர்வகோட்டை சுங்க சாவடி பகுதியை அந்தக் கார் கடக்கும்போது காரில் இருந்து உயிரிழந்த நிலையில் தேவதாசன் உடல் பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்துள்ளது.

அப்போதுதான் தனது காரின் முன்புற பகுதியில் விபத்துக்குள்ளான நபர் சிக்கியிருந்தது காரின் ஓட்டுனருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காருடன் அங்கிருந்து அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து காரையும் டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply